ஊடுருவிய மொசாட்.. எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் இணைய சேவையை முடக்கியது ஈரான்!
தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியிருந்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்த தாக்குதலுக்கு ஈரானுக்குள் ஊடுருவிய மொசாட் உளவாளிகள்தான் காரணம் என்று கூறி ஈரானுக்குள் செயல்படும் ஸ்டார்லிங்க் இணைய சேவையை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று சொல்லிதான் கடந்த 13ம் தேதி அந்நாட்டின் மூன்று அணு ஆய்வு மையங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. ஆனால் இது வெற்றிப்பெறவில்லை. இதனையடுத்து நேரடியாக களத்தில் குதித்த அமெரிக்கா, கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் அணு உலைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டிருக்கிறது.

முழுமையாக அணு உலைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று டிரம்ப் கூறினார். இதனை மறுத்த ஈரான், பலத்த சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எங்களால் நிச்சயம் மீண்டு வர முடியும் என்று தெளிவுப்படுத்தியிருந்தது.
அதேநேரம், இந்த தாக்குதல் எப்படி நடந்தது? தாக்குதலுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையை ஈரான் தொடங்கியது. விசாரணையில், ஈரானுக்குள் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் ஊடுருவியிருந்தனர் என்றும், அவர்கள் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் முக்கிய தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கின்றனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த சட்டப்படி தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், உளவாளிகள் தொடர்ந்து இந்த சேவையை பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த சேவை மூலம் ஈரானுக்குள் இருந்த முக்கிய தகவல்கள் ரகசியமாக கசியவிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த சேவையை பயன்படுத்தியவர்களை ஈரான் அரசு தேடி, தேடி வேட்டையாடி வருகிறது.
மறுபுறம் மேற்கு நாடுகளுக்கு மற்றொரு பெரிய தலைவலி நீடித்து வருகிறது. அதாவது அமெரிக்கா அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்கு முன்பாக ஈரான் சுமார் 400 கிலோ அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருந்தது. இதை வைத்து 10 அணு குண்டுகளை தயாரிக்க முடியும். அமெரிக்க தாக்குதலில் இந்த யுரேனியம் அழிக்கப்பட்டிருந்தால், அல்லது தாக்கப்பட்டிருந்தால் அதிலிருந்து கதிர்வீச்சு வெளியேறியிருக்கும்.
அப்படியான எந்த கதிர்வீச்சும் வெளியறேவில்லை. எனவே, யுரேனியம் எங்கு போனது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சில செயற்கைக்கோள் புகைப்படங்கள், தாக்குதலுக்கு முன்னர் யுரேனியம் பத்திரமாக வெளியேற்றப்பட்டிருப்பதை காட்டுகின்றன. அப்படியெனில் அமெரிக்காவின் தாக்குதல் ஃபெயிலியரா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த யுரேனியம்தான் மேற்கு நாடுகளுக்கு தலைவலியாக மாறியிருக்கிறது. போதாத குறைக்கு அணு ஆய்வு கண்காணிப்பு வளையத்திலிருந்தும் ஈரான் வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications