ஹேப்பி நியூஸ்! ஹார்முஸ் நீரிணை திறப்பு.. ஈரான் அரசு அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை 9 சதவீதம் சரிவு!
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை அனைத்த வணிகக் கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக கச்சா எண்ணெய் விலையில் எதிரொலித்துள்ளது. இது உலக பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான சிக்னலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா - ஈரான் மத்தியிலான 2ஆம் கட்ட பேச்சுவாத்தைக்கு முன்பு இத்தகைய அறிவிப்பு வெளியானது முதலீட்டு சந்தைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். லெபனான் நாட்டில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தும் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் முழுமையாக செல்ல அனுமதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் வரையில் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்கும் என்றும் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்பான பயணம் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பு ஏற்கெனவே அறிவித்த ஒருங்கிணைக்கப்பட்ட பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்பு வெளியான உடனேயே சர்வதேச எண்ணெய் சந்தையில் இதன் விலை வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் (futures market) ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் ஒப்பந்தம் மதிப்பு இந்திய நேரப்படி மாலை 7.45 மணியளவில் 10.80 சதவீதம் குறைந்து 88.66 டாலருக்கு வர்த்தகமானது. இதுவே அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 10.88 சதவீதம் குறைந்து 84.03 டாலராக உள்ளது.
இன்று காலை முதல் பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா மத்தியில் விரைவில் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை துவங்கும் என தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை சிறிய அளவில் குறைந்து வந்தது. தற்போது ஹார்முஸ் மொத்தமாக திறக்கப்பட்டது மூலம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 9 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக முக்கிய பாதையாக இருப்பதால், இதில் ஏற்பட்ட முடக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது ஈரான் முழுமையாக திறக்கப்பட்டதாக அறிவித்தது மூலம் விலை குறைய துவங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்திலும் இந்த அறிவிப்பை தெரிவித்தார். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறந்துவிட்டதாகவும், உலகளாவிய சரக்கு கப்பல்கள் பயணிக்க முழுமையாக தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது என்று அவர் பதிவிட்டார்.
லெபனான் போர் நிறுத்தம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு தலைமையில் நேற்று நடந்த லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் மத்தியிலான கூட்டத்தில், 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதை டிரம்ப் லாஸ் வேகாஸ் செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார். இதை லெபனான் மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.
மேலும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலையும் நிறுத்துவதாக அந்த சந்திப்பில் உத்தரவாதம் கொடுத்துள்ள காரணத்தால் மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி உருவாக்கியுள்ளது. இதன் தாக்கமாக, ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தையும் குறைக்கும் முயற்சிகளும், வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஈரான் தரப்பு, ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவது முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது. இஸ்ரேல் நேரடியாக லெபனானுடன் அல்லாமல், அந்த நாட்டுக்குள் செயல்படும் ஹெஸ்புல்லா அமைப்புடன் மோதி வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈறானுக்கு ஆதரவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துவதை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தனது படைகளை லெபனானில் இருந்து திரும்பப் பெறப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில், இந்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நிலைமை இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்பதே உண்மை. மேலும் ஈரானும் லெபனான் மீதான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ள இந்த 10 நாட்களுக்கு மட்டுமே ஹார்முஸ் திறக்கப்படும் என தெளிவாக தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் வழித்தடம் ஏன் முக்கியம்
உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 - 25 சதவீதம் வரையிலும், இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 25 சதவீத பங்கும் இந்த குறுகிய நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. ஹார்முஸ் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே அதிகளவில் சென்றடைகின்றன.
ஹார்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளின் பட்டியல்:
சவுதி அரேபியா தனது மொத்த ஏற்றுமதியில் சுமார் சுமார் 37.2% ஹார்முஸ் நீரிணை வாயிலாக ஏற்றுமதி செய்கிறது. ஈராக் - சுமார் 22.8% ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 12.9%, ஈரான் சுமார் 10.6%, குவைத் 10.1%, உலகின் முக்கிய LNG ஏற்றுமதியாளரான கத்தார் முழுமையாக இந்த பாதையை நம்பியிருக்கிறது. பஹ்ரைன் பெட்ரோலிய மற்றும் ரசாயன ஏற்றுமதிக்கு இந்த வழியைப் பயன்படுத்துகிறது












Click it and Unblock the Notifications