அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தையா.. நோ சான்ஸ்.. அப்பாஸ் அராக்சி வெளியிட்ட உண்மை!
ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்-க்கு அராக்சி தலைமையிலான குழு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அராக்சி இஸ்லாமாபாத் பயணம் குறித்து முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அப்பாஸ் அராக்சி தனது டிவிட்டரில் இஸ்லாமாபாத், மஸ்கட் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்களுக்கு தான் ஒரு முக்கிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் நோக்கம் இருதரப்பு விவகாரங்கள் குறித்து தனது முக்கிய கூட்டணி நாடுகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்துவது தான் என்று அப்பாஸ் அராக்சி தனது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

"எங்களுடைய அண்டை நாடுகள் தான் எங்களுக்கு முக்கியம்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் அமெரிக்கா உடன் ஈரான் பேச்சுவார்த்தை செய்யவில்லை என்பதை அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தினார்.
அராக்சி-யின் இஸ்லாமாபாத் பயணம் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய படியாக இருக்கும் என கருதப்பட்டது ஆனால் தற்போது அனைத்தும் கணிப்புகளும் உடைந்துள்ளது.
இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று முதலீட்டு சந்தையும் நம்பியது. இதன் வாயிலாக கச்சா எண்ணெய் விலையும் சரிய துவங்கியது. WTI கச்சா எண்ணெய் விலை 2.12 சதவீதம் வரையில் குறைந்து 93.82 டாலராக உள்ளது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.32 சதவீதம் குறைந்து 104.7 டாலராக உள்ளது. ஆனால் இன்று காலை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக ஈரான்-அமெரிக்கா உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு விதித்த கடற்படைத் தடை மற்றும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட இடையூறு ஆகியவை இரு நாடுகள் மத்தியிலான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை தடை செய்திருந்தன. இந்நிலையில் அராக்சியின் இந்த மூன்று நாட்டு பயணம் பிராந்திய அளவில் ஆதரவை திரட்டும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications