இந்தியர்களின் உயிர் முக்கியம்.. போருக்கு நடுவே இந்தியாவுக்காக வான்வெளியை திறந்த ஈரான்.. நெகிழ்ச்சி
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமாகி வருகிறது. இதனால் ஈரான் தனது வான்வெளி பரப்பை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் தான் இந்தியர்களுக்காக மட்டும் ஈரான் தனது வான்வெளியை இன்று திறக்கிறது. இதன்மூலம் ஈரானில் தவிக்கும் 1,000 இந்தியர்கள் விமானத்தில் நாடு திரும்ப உள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்குமான விமான சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரானில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். படிப்புக்காக, வேலைக்காக இந்தியர்கள் ஈரானுக்கு சென்றிருந்தனர்.

தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியவில்லை. விமான சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தான் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் முடிவு செய்துள்ளது.
அதன்படி போருக்கு நடுவே இந்தியர்களை வெளியேற்ற வசதியாக ஈரான் தனது வான்வெளி பரப்பை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஈரானின் மஷாத் நகரில் இருந்து விமானங்கள் டெல்லிக்கு புறப்படுகிறது. மொத்தம் 1,000 இந்தியர்கள் இன்று ஈரானில் இருந்து டெல்லி வர உள்ளனர்.
இவர்கள் மாஹான் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானங்களில் மஷாத் நகரில் இருந்து டெல்லி அழைத்து வரப்படுகின்றனர். இந்த மஹான் ஏர்லைன்ஸ் ஈரான் தலைநகர் டெஹ்ரானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனமாகும்.
இதனை ஈரானும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி ஈரான் சார்பில், ‛‛ஈரானில் இருந்து வெளியேற நினைக்கும் இந்தியர்களுக்காக சார்ட்டர்ட் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியர்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. இந்த நட்பின் அடிப்படையில் போரில் நம் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது வான்வெளி பரப்பை திறந்து நெகிழ வைத்துள்ளது.
இந்தியாவை எடுத்து கொண்டால் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ‛ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை தொடங்கியது. அதன்மூலம் ஈரானில் உள்ள இந்தியர்கள் அண்டை நாடான அர்மேனியாவுக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்து மத்திய அரசு விமானத்தில் டெல்லி அழைத்து வந்தது. அந்த வகையில் நேற்றைய தினம் 110 மாணவர்களை மத்திய அரசு ‛ஆபரேஷன் சிந்து' மூலம் டெல்லிக்கு அழைத்து வந்து வீடுகளுக்கு அனுப்பியது.
ஆனால் ஈரானில் தவிக்கும் இந்தியர்களால் அர்மேனியாவுக்கு வருவதில் சிக்கல் உள்ளது. இதனால் சுமார் 1,000 இந்தியர்கள் வரை ஈரானின் பல்வேறு இடங்களில் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் நம் நாட்டின் தூதரகத்துடன் தொடர்பில் உள்ளனர். இவர்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் ஈரான் தற்போது இந்தியர்களை வெளியேற்ற தனது வான் எல்லையை திறந்து அங்குள்ள தனியார் நிறுவன விமானத்திலேயே அனுப்பி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications