ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்... தலைவர்கள் அஞ்சலி
ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி தனது 82வது வயதில் மரணம் அடைந்தார். ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் மிக முக்கியமானவராக விளங்கியவர் இவர்.
டெக்ரான்: ஈரானில் 1989 முதல் 1997 வரை அதிபராக இருந்த அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 82 வயதான இவர் 2 முறை அதிபராக பதவி வகித்து நடைமுறைக்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர்.
ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் நேற்று மரணமடைந்துவிட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரப்சஞ்சானி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும், நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது உடலுக்கு ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமெனி உள்ளிட்ட பல தலைவர்கள் இறுதி மரியாதையை செலுத்தினார்கள்.
தற்போதைய அதிபர் ஹசான் ருஹானியின் ஆதரவாளரான ரப்சஞ்சானி. தான் பதவிகளில் இல்லாத காலங்களிலும் ஈரான் அரசியலில் தொடர்ந்து ஆதிக்கத்தை செயல்பட்டு வந்தவர். மேலும், அந்நாட்டிற்கு தேவையான நடைமுறைக்கேற்ற கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டவர்.