ஈரானில் ஆண்கள் வாலிபால் போட்டியை காண முயன்ற இளம்பெண்ணுக்கு 1 ஆண்டு சிறை
தெஹ்ரான்: ஈரானில் ஆண்கள் வாலிபால் போட்டியை காண முயன்ற இங்கிலாந்து-ஈரானிய பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் வாலிபால் விளையாட கடந்த 2012ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பெண்கள் வாலிபால் விளையாடினால் அவர்களை அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஆண் பார்வையாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்தவர் இங்கிலாந்து-ஈரானிய ஆர்வலரான கோன்சே கவாமி(25). லண்டன் பல்கலைகழகத்தில் படித்த அவர் அடங்கிய பெண்கள் குழு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய வாலிபால் போட்டியை காண சென்றது. இந்த குழுவினரை போலீசார் கைது செய்து, அடித்து அதன் பிறகு விடுவித்தனர்.
கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் வாலிபால் போட்டியை காண முயன்றதற்காக கவாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்யக் கோரி 7 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications