உலகெங்கும் ஸ்லீப்பர் செல்களுக்கு போன மெசேஜ்.. ரகசியமாக ஈரானில் இருந்து பறந்த சிக்னல்.. பதற்றம்!
தெஹ்ரான்: இஸ்ரேல் -ஈரான் இடையேயான மோதல் 2வது வாரமாகத் தொடர்கிறது. இதற்கிடையே ஈரானில் இருந்து உலகெங்கும் உள்ள ஸ்லீப்பர் செல்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டதாகவும் அந்த மெசேஜ்ஜை அமெரிக்க உளவுத் துறை ஏஜெண்டுகள் இடைமறித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதை இடைமறித்து அமெரிக்க ஏஜெண்டுகள் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் கடந்த பிப்ரவரி 28ம் தேதி மோதல் வெடித்தது. இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தின. இந்த மோதல் 2வது வாரமாக இப்போதும் தொடர்கிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஈரான் நாட்டிலிருந்து வந்த என்கிரிப்ட் (encrypted) செய்யப்பட்ட தகவல்களை அமெரிக்க உளவு ஏஜெண்டுகள் இடைமறித்துள்ளன.

ஸ்லீப்பர் செல்கள்
இந்த சிக்னல் வெளிநாடுகளில் செயல்படும் ஸ்லீப்பர் செல்களுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ் ஆக இருக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்தே இந்த மெசேஜ் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. ஈரானில் இருந்தே அந்த மெசேஜ்கள் அனுப்பப்பட்டதாக அந்த எச்சரிக்கை குறிப்பிடுகிறது. ஈரானில் இருந்து வந்த அந்த சிக்னல் பல நாடுகள் வழியாக மீண்டும் ஒளிபரப்பப்பட்டதாகவும் அது பார்க்கவே பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த மெசேஜ்கள் என்கிரிப்ட் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால் அதில் என்ன தகவல்கள் கூறப்பட்டு இருந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. decryption key வைத்திருப்போருக்கு மட்டுமே அதில் என்ன மெசேஜ் இருக்கிறது என்பது தெரிய வரும். இணையம் அல்லது மொபைல் நெட்வொர்க்குகளைச் சார்ந்து இல்லாமல், எந்தவொரு டிஜிட்டல் தடயங்களையும் விட்டுச்செல்லாமல் தகவல்களை அனுப்ப இதுபோன்ற முறைகளையே அவர்கள் பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன அர்த்தம்
அதாவது ஈரானில் இருந்து ஒரு மெசேஜ் போனதும் அது உலகெங்கும் பரவியதும் உறுதியாகியுள்ளது. இருப்பினும், அதில் என்ன மெசேஜ் இருந்தது. என்ன தகவல்கள் அதில் சொல்லப்பட்டது என்பது குறித்த விவரங்கள் அதில் இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மீண்டும் இதுபோல சர்வதேச அளவில் மீண்டும் ஒளிபரப்பப்படும் பண்புகளுடன் ஒரு புதிய சிக்னல் வந்தால் அது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஏஜெண்டுகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட இடத்திற்கும் எச்சரிக்கை விடுக்கும்படி அதில் அலர்ட் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முடிவுக்கு வராத போர்
தாக்குதலின் முதல் நாளே ஈரான் சுப்ரீம் லீடர் அலி கமேனி கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்த பிறகு, மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதற்கு நேர்மாறாக மோதல் அதிகரித்தது. இஸ்ரேல் ராணுவம் திங்களன்று மத்திய ஈரானில் புதிய தாக்குதல்களைத் தொடுத்ததுடன், பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளையும் குறிவைத்தது.
பதிலடி
ஈரானும் கூட தீவிர பதிலடியைக் கொடுத்து வருகிறது. இஸ்ரேலையும் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள நாடுகளையும் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. அப்படி தான் ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் ஒரு குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து ஈரான் தாக்கியது. அதில் இந்தியர் ஒருவர் உட்பட இரு வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications