அயன் டோம் தயாரித்த ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கி அழித்த ஏவுகணைகள்! ஈரான் ருத்ர தாண்டவம்
தெஹ்ரான்: இஸ்ரேலுக்கு பாதுகாப்பை கொடுப்பது 'அயன் டோம்' எனப்படும் வான் பாதுகாப்பு அம்சம்தான். இதனை தயாரித்த ரஃபேல் நிறுவனத்தின் இஸ்ரேலிய ஆயுத கிடங்கை ஈரான் நேற்றிரவு குறி வைத்திருக்கிறது. இதனால் இஸ்ரேல் கடுமையான சேதங்களை சந்தித்திருக்கிறது.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபாவில் இந்த ஆயுத கிடங்கும், எண்ணெய் கிடங்குகளும் இருக்கின்றன. இவற்றை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

நேற்றிரவு வெறும் 2 மணி நேரத்தில் டெல் அவிவ் மீது 50 ஏவுகணைகளும், ஹைஃபா மீது 20 ஏவுகணைகளும் ஏவப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகையை சேர்ந்தது என்பதால், இதை தடுப்பது இஸ்ரேலுக்கு சிரமமாக இருந்திருக்கிறது. எனவே, சில ஏவுகணைகள் இலக்கை தாக்கி அழித்துள்ளன.
ஈரானின் ஷஹாப்-3, சோல்ஃபாகர் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் (Mach 5) பயணிப்பதால் இஸ்ரேலுக்கு இதை தடுப்பது மிகப்பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. நேற்றிரவு நடந்த தாக்குதலில் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
விஷயம் என்னவெனில், இஸ்ரேலை பாதுகாப்பதே அயன் டோம் தான் என்று அந்நாட்டு பெருமை பேசி வந்த நிலையில், அதை தயாரித்த ரஃபேல் அயுத கிடங்கை ஈரான் தாக்கியிருப்பது, சர்வதேச அளவில் ரஃபேல் நிறுவனத்தின் மீதும், அது தயாரித்த அயன் டோம் அமைப்பின் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் தரப்பு மறுத்திருக்கிறது. எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் ரஃபேல் ஆயுத கிடங்கை தாக்கவில்லை என்று மறுத்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்த நிபுணர்கள் கூறுகையில், "அயன் டோம் அமைப்பை பற்றி ஓவராக பில்டப் செய்யப்பட்டிருக்கிறது. இது காஸா மற்றும் லெபனானில் இருந்து வரும் ராக்கெட் தாக்குதல்களுக்கு எதிராக இஸ்ரேலுக்கு அரணாக விளங்குகிறது என்பது உண்மைதான். ஆனால், குறுகிய தூர ராக்கெட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் மட்டுமே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. காஸாவிலிருந்து அடிக்கடி ஏவப்படும் கஸ்ஸாம் மற்றும் கிராட் ரக ராக்கெட்டுகள் போன்ற 4 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்லும் ராக்கெட்டுகளை இடைமறிக்கும் திறன் மட்டுமே இதற்கு இருக்கிறது.
இது முதன் முதலில் 2011ம் ஆண்டுதான் பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவின் கணிசமான நிதி உதவியுடன், ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டது.

இதன் செயல்பாடு ரொம்ப சிம்பிள். தங்கள் எல்லைக்குள் வரும் ராக்கெட்டுகளை பார்த்து, அதை அடையாளம் கண்டு, தமீர் எனப்படும் ஒரு ஏவுகணையை ஏவும். அது ராக்கெட்டை தாக்கி அழிக்கும். ஒவ்வொரு தமீர் ஏவுகணையும் சுமார் ரூ.43 லட்சம் வரை இருக்கும். ஆனால், காசாவிலிருந்து வரும் ராக்கெட்டுகள் சில ஆயிரம் மதிப்புடையவைதான். எனவே இதனை பயன்படுத்துவது கொஞ்சம் காஸ்ட்லி. இருப்பினும் நல்ல பலனை இது கொடுத்தது" என்று கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில்தான் இதனை உருவாக்கிய ரஃபேல் நிறுவனத்தின் இஸ்ரேலிய ஆயுத கிடங்கை ஈரான் குறி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications