ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி!
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் நேற்று இரவு இஸ்ரேலின் வடக்கு பகுதியை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று அதிகாலை ஈரானின் தலைநகர் தெஹ்ரான், தப்ரீஸ் மற்றும் இஸ்பஹான் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல்களால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்திய போதிலும், இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தது. இதனால் டிரம்பின் ஈரான் அமைதி முயற்சிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் அடுத்தகட்ட நகர்வு என்ன?
இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பிறகு மத்திய கிழக்கு பகுதி அடுத்தகட்டமாக எங்கு நோக்கிச் செல்லும் என்ற பயம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை (IRGC) இந்த விவகாரம் குறித்துத் தெரிவிக்கையில், முந்தைய ஏவுகணைத் தாக்குதல் என்பது இஸ்ரேலுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ஆரம்பக்கட்ட 'எச்சரிக்கை மணி' (Warning shot) மட்டுமே என்றும், லெபனான் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
மேலும், இஸ்ரேல் இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டால், அதைவிடப் பலமடங்கு கடுமையான மற்றும் அழிவுமிக்க பதிலடியை ஈரான் கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பானது, இஸ்ரேல் மேலும் தாக்குதலைத் தொடரவில்லை என்றால் தங்களுக்குப் போரை நீட்டிக்கும் எண்ணம் இல்லை என்பதையே காட்டுகிறது. இருப்பினும், இரு நாடுகளும் தங்களின் ராணுவ பலத்தைக் காட்டி அச்சுறுத்தி வருவதால், சர்வதேசச் சந்தைகளும் உலகத் தலைவர்களும் அடுத்தகட்ட நகர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வருகின்றனர்.
முக்கியமாக ஈரான் - இஸ்ரேல் மத்தியில் இருக்கும் மற்ற வளைகுடா நாடுகளுக்கு தான் தற்போது பீதி அதிகரித்துள்ளது. ஈரான் அமெரிக்க படைகள் இருக்கும் அனைத்து வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியமும் தற்போது மிகுந்த அச்சத்தில் உள்ளது.
கச்சா எண்ணெய்
இந்தத் திடீர் போர்ச் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை ஒரே மணி நேரத்தில் ராக்கெட் வேகத்தில் எகிறியுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை 3.63% உயர்ந்து ஒரு பேரல் $96.75 ஆகவும், அமெரிக்காவின் டபிள்யூடிஐ (WTI) கச்சா எண்ணெய் விலை 3.35% உயர்ந்து $93.89 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் சில்லறை விலையை உயர்த்தக்கூடும் என்பதால் நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்குப் புதிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications