"கமேனி ஆட்சி கவிழும்.." ஈரான் பட்டத்து இளவரசர் பகீர்! அடுத்து வெடிக்கும் உள்நாட்டு குழப்பம்?
தெஹ்ரான்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. இரு தரப்பும் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியே வருகிறது. இதற்கிடையே இஸ்லாமிய குடியரசு விரைவில் வீழ்ச்சியடையும் நிலையில் இருப்பதாக ஈரான் இளவரசர் ரேசா பஹ்லவி தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் நாட்டில் இப்போது பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவே நேரடியாக அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் நேற்று திடீர் தாக்குதலை நடத்தியது.

ஈரானில் ஆட்சி மாற்றம்?
இதுபோல தாக்குதல் தொடர்ந்து வருவதால் அங்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஈரானின் கடைசி ஷா முகமது ரேசா பஹ்லவியின் மகன் ரேசா பஹ்லவி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். ஈரானில் இப்போது மோசமான நிலை இருப்பதாகக் கூறிய அவர், நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும், சட்டத்தின் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
1979ல் இஸ்லாமியப் புரட்சியில் முகமது ரேசாவின் அரசு கவிழ்க்கப்பட்டது. அப்போது முதலே ரேசா பஹ்லவி அமெரிக்காவில் தான் வசித்து வருகிறார். அவருக்கு ஈரானில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பதவியும் இல்லை என்றாலும் ஈரானில் கமேனி அரசு அகற்றப்பட வேண்டும் என்றும் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் இவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கமேனி
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஈரானின் தற்போதைய அரசு சரிந்து வருகிறது. அயத்துல்லா அலி கமேனி உட்பட பல தலைவர்கள் ஈரானை விட்டுத் தப்பியோடப் பார்க்கிறார்கள். நான் அலி கமேனி ஒன்றை மட்டும் நேரடியாகச் சொல்ல விரும்புகிறேன்.. பதவி விலகினால், உங்கள் மீது நியாயமான முறையில் சட்டப்படி விசாரணை நடக்கும்.
மேற்குலக நாடுகள் இந்த ஆட்சிக்கு உதவி செய்தால், குழப்பம் அதிகரிக்கவே செய்யும். இந்த ஆட்சி அவமானத்தைச் சந்தித்துவிட்டது. இனிமேல் இவர்கள் சரணடைய மாட்டார்கள். இவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல், சவுதி என எந்த நாடும், எந்த மக்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது.
ஜனநாயகம் தேவை
ஜனநாயகத்தை நோக்கி ஈரானை வழிநடத்த நான் தயார்.. எனக்குத் தனிப்பட்ட அதிகாரம் தேவையில்லை. நாட்டின் மாற்றத்திற்கு உதவவே விரும்புகிறேன். இதற்காகவே நான் இப்போது ஈரான் மக்களிடம் வந்துள்ளேன். சமாதானம் மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். எனக்கு அரசியல் அதிகாரம் தேவையில்லை. மாறாக, நமது நாடு ஸ்திரத்தன்மை, சுதந்திரம் மற்றும் நீதியின் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றார்.
தொடர்ந்து விமர்சனம்
ஈரானின் கடைசி மன்னர் முகமது ரேசா ஷாவின் மகனான ரேசா பஹ்லவி தொடர்ச்சியாகவே கமேனி தலைமையிலான அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கமேனி பதவி விலக வேண்டும் என்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்களே ஈரானை வழிநடத்த வேண்டும் என அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஈரானின் மூன்று அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு கமேனியின் பயங்கரவாத ஆட்சியே காரணம் என்றும் கூட பஹ்லவி சாடியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் கமேனி ஆட்சி சீக்கிரம் கவிழும் என மீண்டும் அவர் கூறியிருக்கிறார். ஈரானில் பதற்றம் கையை மீறிச் செல்லும் அளவுக்கு மோசமானதாக மாறியிருக்கும் சூழலில் பஹ்லவியின் இந்த கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications