ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து களமிறங்கும் ஈரானிய ஹல்க் !
மவுசல்: 'ஈரானிய ஹல்க்' என்று அழைக்கப்படும் 24 வயதுடைய பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஈராக்கிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து தாமும் போரிட போவதாக பளுதூக்கும் வீரா் சாஜாத் கஹ்ரிபி கூறியுள்ளார்.
சாஜாத் கஹ்ரிபி பவர் லிப்டிங் முறையில் தான் அதிகமாக பயிற்சிகள் செய்கிறார். அதிக எடைகள் கொண்டு பயிற்சி செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான செயல். இவரை "தி பெர்சியன் ஹெர்குலிஸ்" என்றும் கூறுகின்றனர்.
இன்ஸ்டாகிராம் உபயோகபடுத்தும் உலகளாவிய பயனாளர்களுக்கு ஈரானிய ஹல்க் என அழைக்கப்படும் பெர்சியன் ஹெர்குலஸ் மிக பிரபலமானவர்.
இவர் டபிள்யூடபிள்யூஇ (WWE)மோதலிலும் பலரை கவர்ந்த நபர் ஆவார். இவர் பளுதூக்கும் பிரிவில் 330 பவுண்டு முதல் 386 பவுண்டு எடையை தூக்கி சாதனை புரிந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இவர் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து சிரியாவில் நடைபெறும் போரில் தானும் இணைந்து எதிரிகளை அழிக்க அந்நாட்டு அதிபர் பஷார்-அல்-ஆசாத்திடம் தானாக முன்வந்து விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் பாலோவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சாஜாத் கஹ்ரிபியின் தோற்றத்தை கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்திடும் 'பல்லூஜா புல்டோசர்' என முதலில் வதந்தி பரப்பபட்டது. ஆனால் அந்த வதந்தியும் தற்போது பொய்யாகியுள்ளது.