கோட்டை விட்ட ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலை ஏன் தடுக்க முடியவில்லை? பிரச்சனை இதுதான்! வெளிவந்த ரகசியம்!
தெஹ்ரான்: ஈரான் ஒன்னும் சும்மா சாதாரண நாடு கிடையாது. ராணுவ பலத்தில் அசுரத்தனமானது. இருப்பினும் இன்று காலை தன் நாட்டின் அணுசக்தி மையங்கள் மீதும், ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஏன் ஈரானால் தடுக்க முடியவில்லை? இதற்கான காரணங்கள் ஒவ்வொன்றாக தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கடந்த மாதம் 15ம் தேதி 'பிரேக்கிங் டிபென்ஸ்' எனும் ஆங்கில செய்தி ஊடகத்தில் ஒரு முக்கியமான செய்தி வெளியாகியிருந்தது. 'ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆய்வுகளுக்கான மையத்திலிருந்து' வந்த தரவுகளை இந்த ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், ஈரான் தனது அணுசக்தி மையங்களை சுற்றி நிலை நிறுத்தியுள்ள வான் பாதுகாப்பு அம்சங்கள் பலவீனமாக இருக்கின்றன என்று தெரிவித்திருந்தது.

சரியாக ஒரு மாதம் கழித்து, இன்று ஈரான் நாட்டின் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதை ஏன் ஈரானால் தடுக்க முடியவில்லை? ஏற்கெனவே குறைபாடுகள் இருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்த பின்னரும் கூட, அதை சரி செய்ய ஈரான் நடவடிக்கை எடுக்கவில்லையா? ஏன் அப்படி செய்யாமல் இருந்தது? இது பற்றிய கேள்விகள்தான் தற்போது எழுந்து வருகின்றன.
ஈரானின் மிக முக்கிய அணுசக்தி மையம் 'நடான்ஸ்' பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மையத்தின் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் தாக்கியது. இதனையடுத்து மையத்தை பாதுகாக்க புதிய ரேடார் அமைப்புகளை ஈரான் நிலைநிறுத்தியிருந்தது. புது மாற்றம் குறித்து வீடியோ ஒன்றையும் அந்நாடு வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் இருந்த ரேடார்களைதான் ஜேம்ஸ் மார்ட்டின் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஆய்வுகளுக்கான மையத்தினர் ஆய்வு செய்தனர். மொத்தம் 4 ரேடார்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றில்
ஈரானிய நஜ்ம் 804 ரேடார் -1
சோவியத் கால P-12 ஸ்பூன் ரெஸ்ட் A ரேடார்கள் - 2
ரஷ்யாவை சேர்ந்த SAM - 1
இதுதான் பாதுகாப்புக்காக ஈரான் பயன்படுத்தி வந்தது. இதில் சிக்கல் என்னவெனில், இவை அனைத்தும் பழைய ரேடார்கள். இவற்றால் ஒருங்கிணைந்து தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது. முதல் தோல்வி ரேடார்களை 'ப்ளர்' செய்யாமல் வீடியோவை அப்படியே பொதுவெளியில் பகிர்ந்ததுதான். இரண்டாவது தோல்வி இந்த ரேடார்கள் அதிநவீன ஏவுகணைகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள திணறும். இது இரண்டும்தான் இஸ்ரேலின் தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள தவறியதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
இதுதவிர மற்றொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதாவது ஈரானுக்குள் இஸ்ரேல் ட்ரோன்களை பதுக்கி வைத்திருந்து, திடீரென அந்நாட்டின் வான் பாதுகாப்பு அம்சங்களை தாக்கி அழித்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் ஷேராகி வருகின்றன. இது எப்படி சாத்தியம்? ஈரான் எதிர்ப்பாளர்களின் உதவியுடன் ட்ரோன் தளம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை அது இஸ்ரேலின் உதவியுடன் தாக்குதலை நடத்தியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக இவையெல்லாம்தான் ஈரானின் தோல்விக்கு முக்கிய காரணம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியபோதே விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டும் தாக்குதலை கோட்டை விட்டிருக்கிறது ஈரான். உக்ரைன்-ரஷ்யா போர் நடைபெற்று வருவதால், உடனடியாக ஈரானுக்கு ரஷ்யாவிடமிருந்து உதவி கிடைக்கவும் வாய்ப்பு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications