அயன்டோமுக்கு விபூதி அடித்த ஈரான்! முக்கிய விமான தளத்தை ஒன்றும் இல்லாமல் செய்த ஏவுகணைகள்!
டெல் அவிவ்: இஸ்ரேலின் முக்கிய விமான தளமாக கருதப்படும் நெவடிம் விமான தளத்தை ஈரானின் ஏவுகணைகள் பதம் பார்த்துள்ளன. இந்த தாக்குதலில் விமான தளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனம் மீது கடந்த ஓராண்டாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. இதனை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பை தாக்குவதாக அறிவித்த இஸ்ரேல், லெபனானில் உள்ளே திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். விரைவில் தரைப்படையினர் லெபனான் நாட்டிற்குள் நுழைவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பையடுத்து நேற்று இரவு ஈரான் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ஈரான், இஸ்ரேல் மீது ஏவியது. ஈரான் புரட்சிப்படையினர்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். தாக்குதலுக்காக 'ஃபத்தா-1' பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது குறைந்த தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க பயன்படுத்தப்படும்(SRBM).
குறிப்பாக 300-700 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை குறிவைக்க இந்த வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் உள்நாட்டு தயாரிப்புகளான இந்த ஏவுகணைகளின் தாக்கும் திறன் துல்லியமாக இருக்கும் என்பதால், இதை தனது முதல் தாக்குதலுக்கு ஈரான் பயன்படுத்தியுள்ளது. ஆனால், இஸ்ரேல் வசம் அயன்டோம் எனப்படும் பாதுகாப்பு அம்சம் இருக்கிறது. இது வானில் வரும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அம்சம் கொண்டது.
இந்த பாதுகாப்பு அம்சத்தையும் மீறி ஈரான் ஏவுகணைகள் எப்படி தாக்கியது என்பது தற்போது விவாதமாக இருக்கிறது. இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. முதல் காரணம் எண்ணிக்கை. அதாவது ஒரே சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகள் ஏவப்படும்போது, எதை தாக்கி அழிப்பது என்கிற குழப்பம் ஏற்படும் எனவே, சரியாக எதையும் குறி வைக்க முடியாது.
இரண்டாவது வேகம். அதாவது 'ஃபத்தா-1' பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பயணிக்கும். யோசித்து பாருங்கள் மணிக்கு 4,900 கி.மீ வேகத்தில் உங்களை நோக்கி ஒரு ஏவுகணை வருகிறது எனில், அதை எப்படி எதிர்கொள்ள முடியும்? இப்படித்தான் இஸ்ரேலின் அயன்டோம் கோட்டைவிட்டிருக்கிறது.
இந்த தாக்குதலில் சுமார் 90% ஏவுகணைகள் இலக்கை சரியாக குறிவைத்து அழித்திருக்கின்றன என ஈரான் கூறுகிறது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு துறை கூறுகையில், "நாங்கள் மூன்று இலக்குகளை குறிவைத்தோம். ஒன்று உளவு வேலைகளை செய்யும் மொசாட்டின் தலைமை அலுவலகம். இரண்டாவது, அமெரிக்காவின் எஃப் 35 மற்றும் எஃப் 15 விமானங்களை கொண்டுள்ள நெவடிம் விமான தளம். மூன்றாவது, ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஹெட்செரிம் விமான தளம். இந்த இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டிருக்கின்றன" என்று தெரிவித்திருக்கிறது.
இதில் 50 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட நெவடிம் விமான தளம், முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல மொசாட் தலைமையகம் அருகில் ஏவுகணைகள் தாக்கியதில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பதில் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. அப்படி ஒன்று நடந்தால், இஸ்ரேல் என சொல்லிக்கொள்ள ஒரு நாடே இருக்காது என ஈரான திட்டவட்டமாக கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications