எச்சரிக்கை மணி.. தாலிபானை ஆதரிக்க போய் சிக்கலில் மாட்டிய பாக். கிரிக்கெட்.. அதிர்ச்சியில் ரமீஸ் ராஜா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசியல் நிலைப்பாடு அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானே தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுகொண்டுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சிகளை வழங்கியது ஒரு பக்கம் என்றாலும் தோஹா ஒப்பந்தத்தை மேற்கொண்டதில் பாகிஸ்தானின் பங்களிப்பு அதிகம் இருந்தது. தாலிபான்களுக்கு பாகிஸ்தான் கடந்த 20 வருடமாக மறைமுகமாக ஆதரவு அளித்து வந்தது.
ஆனால் கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பாகிஸ்தான் தாலிபான் அமைப்பை ஆதரித்து, அவர்களின் வெற்றியையும் அங்கீகரித்து உள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு மேற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளது. ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. தாலிபான் அமைப்பும் பாகிஸ்தானின் ஆதரவால் நம்பிக்கையோடு ஆட்சியை தொடங்கி உள்ளது.

எதிர்ப்பு
ஆனால் இந்த தாலிபானின் ஆதரவு நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு மற்ற சர்வதேச விவகாரங்களில் எதிராக திரும்பி உள்ளது. ஐநாவின் பாகிஸ்தான் மீதான மதிப்பும், காஷ்மீர் விவகாரத்தில் மேற்கு உலக நாடுகளின் ஆதரவையும் பாகிஸ்தான் இழந்து உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் பாகிஸ்தானின் குரல் இனி பெரிய அளவில் எடுபட வாய்ப்புகள் இல்லை என்று கருதப்படுகிறது. தாலிபான்கள் நல்ல ஆட்சி நடத்தி நன்மதிப்பை பெறும் நிலையில் பாகிஸ்தானுக்கும் சிக்கல் குறையும். ஆனால் தற்போதைக்கு பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நிறைய எதிர்ப்புகள் நிலவி வருகின்றன.

கிரிக்கெட்
இது பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளிலும் எதிரொலித்து உள்ளது. ஆப்கான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, தாலிபான் - பாக் நட்பு உள்ளிட்ட காரணங்களால் பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி நியூசிலாந்து பாகிஸ்தானில் இருந்து கடைசி நேரத்தில் கிரிக்கெட் தொடர் ஆடாமல் வெளியேறி உள்ளது. சரியாக டாஸ் போடும் நேரத்தில் இப்படி நியூசிலாந்து வெளியேறியது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பயிற்சி செய்ய முடியாது
இன்னொரு பக்கம் இங்கிலாந்தும் நேற்று பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இரண்டு பெரிய கிரிக்கெட் தொடர்களை பாகிஸ்தான் நம்பி இருந்தது. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன் பயிற்சி போல இந்த இரண்டு தொடர் இருக்கும் என்று பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் அது பாகிஸ்தானுக்கே எதிராக திரும்பி உள்ளது. பாதுகாப்பு குறைபாட்டை காரணம் காட்டிதான் இரண்டு நாடுகளுமே தொடரை புறக்கணித்து உள்ளன என்றாலும் ஐபிஎல்தான் இதற்கு காரணம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஐபிஎல் மீது புகார்
ஐபிஎல் காரணமாக, அதில் ஆட வேண்டும் என்பதால் இப்படி நியூசிலாந்து வீரர்கள் வெளியேறிவிட்டனர். இங்கிலாந்தும் அவர்களை பின் தொடர்ந்து சென்றுவிட்டனர். பிசிசிஐ கொடுத்த அழுத்தம் காரணமாக இப்படி இவர்கள் தொடர்களை புறக்கணித்து உள்ளனர். ஐபிஎல் காரணமாக எங்களின் கிரிக்கெட் பாதிப்பை சந்தித்து உள்ளது என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம் அடைந்து உள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் காரணமாக பாகிஸ்தான் போட்டிகளில் பெரிய வீரர்கள் ஆடியது கிடையாது.

ஆனால் சம்பந்தம் இல்லை
ஐபிஎல்லில் ஆட வேண்டும் என்று பெரிய வீரர்கள் இந்தியா வந்து விடுவார்கள். பாகிஸ்தானுக்கு புதிய வீரர்களை இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த முறை மொத்தமாக தொடரை புறக்கணித்து உள்ளனர். பாதுகாப்பு காரணங்கள்தான் இதற்கு காரணம் என்று நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் உறுதியாக தெரிவித்து உள்ளன. ஐபிஎல்லுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, நீங்கள் தாலிபானை ஆதரித்த காரணத்தால் இப்படி சிக்கலில் மாட்டி உள்ளீர்கள் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தானை விமர்சனம் செய்துள்ளனர்.

கிரிக்கெட் எதிர்காலம்
அரசியல், தாலிபான், ஐபிஎல் இதை எல்லாம் தாண்டி பார்த்தால் ஒரு கிரிக்கெட் ரசிகராக பாகிஸ்தானின் இந்த நிலை கண்டிப்பாக பலருக்கும் வருத்தத்தை கொடுக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இப்போதுதான் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார். பாபர் போன்ற வீரர்கள் இப்போதுதான் உலக அளவில் கவனிக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் பெரிய அணிகளுடன் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது பாகிஸ்தானின் கிரிக்கெட் எதிர்காலத்தை பாதிக்கும்.

புலம்பல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா இந்த தொடர் சம்பவங்கள் குறித்து வருத்தத்தோடு புலம்பி இருக்கிறார். இங்கிலாந்தின் முடிவு எங்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. கிரிக்கெட் மீதான ஆதரவு அதிகம் தேவைப்படும் சமயத்தில் இங்கிலாந்து தாங்கள் கொடுத்த வாக்கில் இருந்து கைகழுவிக்கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. நாங்கள் கண்டிப்பாக இதில் இருந்து மீண்டு வருவோம்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. நாம் உலக அளவில் பெரிய அணியாக உருவெடுக்க வேண்டும். மற்ற அணிகள் எல்லாம் நம்முடன் போட்டியிட வரிசையில் நிற்கும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும் என்று வருத்தத்தோடு புலம்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications