தோல்வியை மறைக்க நடக்கும் நாடகமா? பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் பொறுப்பு.. பின்னணி என்ன?
இஸ்லாமாபாத்: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்களே அது போல இந்தியாவுக்கு எதிரான சண்டையில் 'நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்' என சுய தம்பட்டம் அடித்து வரும் பாகிஸ்தான், இந்த தகவலை அந்நாட்டு மக்கள் மத்தியிலும், சர்வதேச ஊடகங்களிலும் பரப்பி வருகிறது. இதற்கு காரணமான, ராணுவ தளபதி அசிம் முனீருக்கு தற்போது 'பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிகைக்கான காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு சதி செயலிலும் ஈடுபட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பாவி சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா நடத்திய இந்த அதிரடி ஆபரேஷனில் பாகிஸ்தானில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் மீதான இந்த தாக்குதலால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.
சத்தமின்றி செய்த பாகிஸ்தான்
இந்தியாவை நோக்கி நூற்றுக்கணக்கான டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. இவற்றை வானிலேயே இந்தியா தாக்கி அழித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் உச்ச கட்ட போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது.
அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த சண்டை நிறுத்தம் ஏற்பட்ட பிறகு அன்று இரவே பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்த நிலையில், இரவில் தாக்குதலை நிறுத்தியது. அதன்பின்னர் பெரிய அளவில் எல்லையில் பதற்றம் இல்லை. தற்போது பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டு இருக்க கூடிய நிலையில், பாகிஸ்தானில் சத்தமில்லாமல் ஒரு விஷயம் நடந்துள்ளது.
ஆசிப் முனீருக்கு மார்ஷல் பொறுப்பு
அதாவது, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிப் முனீருக்கு ஃபீல்டு மார்ஷல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய பொறுப்பு ராணுவ தளபதிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு இடையே இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டு இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தில் இருந்த போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீர் அகமது ஷா சில நாட்கள் மாயமானதாகவும் பதுங்கு குழிகளில் எல்லாம் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் கூட தகவல் வெளியானது.
இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் பெருத்த சேதத்தை எதிர்கொண்டது. பாகிஸ்தான் கடுமையான பின்னடவை சந்தித்தது. ஆனாலும் தங்களுக்கே இந்தியாவுடான சண்டையில் வெற்றி கிடைத்ததாக கூறி அந்நாட்டு மக்களை நம்ப வைக்க முயற்சித்தது. இத்தகைய சூழலுக்கு இடையே அவருக்கு பீல்டு மார்ஷல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் கபடநாடகம் தான்
பாகிஸ்தான் ராணுவ தளபதியாக ஆசிப் முனீர் பொறுப்பேற்றபிறகு அந்த நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கவே செய்துள்ளன. அதாவது, கடந்த ஆண்டு மட்டும் 784 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று இருப்பது. இதில், 579 சிவிலியன்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவே அதிகபட்சமாகும். கடந்த 2023 ஆம் ஆண்டு ராணுவத்திற்கு எதிராக அந்தநாட்டு மக்கள் கொந்தளித்தனர்.
ராணுவ தலைமையகம் மீதே தாக்குதல் நடைபெற்றது. பலோசிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக பொராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தொடர் தோல்விகள், நிர்வாக குளறுபடிகள் என தடுமாறிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவை ஜெயித்துவிட்டோம் என்று காட்டிக்கொள்வதற்காக போடும் கபடநாடகமே இதெல்லாம் என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications