சவுதியில் தவித்த தமிழக என்ஜினியரை மீட்ட ஐ.எஸ்.எப்.
சவுதி: சவுதியில் தவித்த தமிழக என்ஜினியரை ஐ.எஸ்.எப். அமைப்பு மீட்டு ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பரசுராமபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்னும் சிவில் என்ஜினியர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சென்னை(ஸ்மார்ட் கன்சல்டன்சி)ஏஜென்சி மூலம் 3000 சவூதி ரியால் சம்பள ஒப்பந்தத்துடன் என்ஜினியராக சவுதி அரேபியா அல் ஹஸ்ஸாவில் இருக்கும் அலி ஹுசைன் அல் கலீஃபா என்னும் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்.
15 நாட்கள் வேலை செய்த அவரை திடீரென்று உனது விசா லேபர் பிரிவில் இருப்பதால் நீ லேபராக பணிபுரிய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இவர் லேபராக பணிபுரிய விருப்பமின்றி தன்னை ஊருக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு கேட்டுள்ளார்.
இவரது கோரிக்கையை நிராகரித்த அந்நிறுவனம் இவரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்க முனைந்தது. பாதிக்கப்பட்ட சாகுல் அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம்(ஐ.எஸ்.எப்.) சமூக நலத்துறையை அணுகியுள்ளார்.
உடனடியாக களத்தில் இறங்கிய ஐ.எஸ்.எப். அமைப்பினர் பாதிக்கப்பட்டவரின் சார்பில் அல்ஹஸ்ஸா லேபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 09.11.14 அன்று பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி இவரது பாஸ்போர்ட் மற்றும் இதர ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கம்பெனியின் நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவையடுத்து பாதிக்கப்பட்டவர் உரிய பாதுகாப்போடு கடந்த 16.11.14 அன்று மீண்டும் கடையநல்லூருக்கு ஐ.எஸ்.எப். சமூக நலத்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
வழக்கு நிலுவையில் இருந்த மூன்று மாதங்களும் தனக்கு அடைக்கலம் கொடுத்து உணவும் கொடுத்து ஆறுதலாகவும் இருந்து தன்னை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த அல்ஹஸ்ஸா கிளை ஐ.எஸ்.எப். பொது செயலாளர் யூசுப்கான், சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் முகம்மதலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமது நன்றியினை தெரிவித்து கொள்வதாக சாகுல் ஹமீது கூறியுள்ளார்.
சமூக பொறுப்புடன் செயலாற்றிய இந்தியன் சோஷியல் ஃபோரம் அல்ஹஸ்ஸா கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் மாநில தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி மற்றும் பொதுச் செயலாளர் திப்பு சுல்தான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications