இது சாத்தானின் செயல்... அமெரிக்கர் தலை துண்டிப்புக்கு ஒபாமா கண்டனம்
பாக்தாத்: அமெரிக்கப் பிணையாளி பீட்டர் எட்வர்ட் காஸிக் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட செயலுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது சாத்தானின் செயல், தீய செயல், ஏற்றுக் கொள்ள முடியாத கொடும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பீட்டர் எட்வர்ட் காஸிக். இவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதியாக சிறை பிடித்தனர். பின்னர் அவரை இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம் செய்தனர். அவருக்கு அப்துல் ரஹ்மான் காஸிக் என்றும் பெயரிட்டனர். அதன் பின்னர் அவரைத் தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர்.

துண்டிக்கப்பட்ட தலையுடன் காஸிக் பிணமாக கிடக்கும் வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளனர். இந்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. காஸிக்கின் தலை, அவரது தலையைத் துண்டித்த தீவிரவாதியின் காலடியில் விழுந்து கிடக்கிறது. அந்த நபர் சுத்தமான இங்கிலாந்து ஆங்கிலத்தில் பேசுகிறார். அவர் கூறுகையில், இது பீட்டர் எட்வர்ட் காஸிக், அமெரிக்க குடிமகன் என்று அந்த நபர் கூறுகிறார்.
இந்த, வீடியோ உண்மையானதுதான் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிபர் ஒபாமா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இது சாத்தானின் செயல், தீய சக்தியின் செயல். ஏற்றுக் கொள்ள முடியாத செயல்.
காஸிக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிரிய உள்நாட்டுப் போரால் காயமடைந்த பல சிரிய நாட்டு மக்களுக்காக உழைத்தவர் காஸிக். பலரைக் காயத்திலிருந்து மீட்டவர். மனித நேயம் மிக்கவர் என்று அவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 16 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், மேலும் பல தலை துண்டிக்கப்பட்ட உடல்களும் காணப்பட்டன. அவை சிரிய படை வீரர்களின் உடல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்து சுத்தமான ஆங்கிலத்தில் பேசிய அந்தத் தீவிரவாதி மேலும் கூறுகையில், ரோம் நகரத்து நாயான ஒபாமாவுக்கு சொல்லிக் கொள்கிறோம், இன்று பஷரின் படை வீரர்களை கொன்று குவித்துள்ளோம். நாளை உனது நாட்டு படை வீரர்களையும் இதே போல கொன்று குவிப்போம் என்று கோபாவேசமாக கூறுகிறார் அந்த நபர்.
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஆலன் ஹென்னிங் என்ற வெளிநாட்டவரைக் கொன்று வீடியோ வெளியிட்டபோது அடுத்து காஸிக் கொல்லப்படுவார் என்று தீவிரவாதிகள் எச்சரித்திருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
காஸிக், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 3வது அமெரிக்கர் ஆவார். இதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் சோட்லாப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த நிவாரணப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸும் கொல்லப்பட்டுள்ளார்.
காஸிக் இன்டியானோ போலீஸ் நகரைச் சேர்ந்தவர். அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர். ஈராக்கில் 2007ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் ரேஞ்சர் பிரிவில் இடம் பெற்று பணியாற்றியுள்ளார். பின்னர் உடல் நலக் காரணத்திற்காக அவர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் நாடு திரும்பிய அவர் அங்கு அவசர மருத்துவ சேவை பயிற்சியைப் பெற்றார். பின்னர் லெபனான் சென்றார். அங்கு பாலஸ்தீன அகதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அதேபோல சிரியாவில் உள்நாட்டுப் போரால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை தரும் சேவையிலும் ஈடுபட்டு வந்தார். அப்போதுதான் அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி அவர் பிணைக் கைதியாக சிறைபிடிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications