வேவு பார்த்ததாக புகார்... 2 ஆண்களின் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி சித்ரவதை செய்து கொன்ற ஐஎஸ்ஐஎஸ்!
டமாஸ்கஸ்: தீவிரவாதிகள் போல் நடித்து இயக்கத்தை வேவு பார்த்ததாக குற்றம் சாட்டி இரண்டு ஆண்களை, உடலில் வெடிகுண்டு கட்டி வெடிக்கச் செய்து கொலை செய்த பயங்கர வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு இயங்கி வருகிறது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம். உலகையே அச்சுறுத்தி வரும் இந்த இயக்கத்திற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் ஆட்கள் வந்து சேர்ந்தபடி உள்ளனர். இதனால் அந்த இயக்கம் வேகமாக பலம் பெற்று வருகிறது.
ஆனால், தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போல் நடித்து சிலர் அந்த இயக்கத்திற்கு எதிராக வேவு பார்த்ததாகத் தெரிகிறது. இவ்வாறு பிடிபட்டவர்கள் இரண்டு பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாகக் கொலை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், இரண்டு ஆண்களின் உடலில் வெடிகுண்டு கட்டப் பட்டுள்ளது. அதன் திரியை எரிய விட்டு, அவர்களது கண்களில் மரண பயத்தை ஏற்படுத்தி தீவிரவாதிகள் சித்ரவதை செய்கின்றனர். பின்னர் அந்த வெடிகுண்டுகள் வெடித்து, அவ்விருவரும் உயிரிழக்கின்றனர். பின்னர் ஒரு கட்டிடம் வெடித்துச் சிதறுவதும் காட்டப் படுகிறது. அதாவது வேவு பார்த்ததாக கொலை செய்யப்பட்ட இருவரும் அந்தக் கட்டிடத்தின் உள்ளேயே கொலை செய்யப் பட்டுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து வேவு பார்க்க நினைப்பவர்களை பீதியடைய வேண்டும் என்பதற்காக வெளியிடப் பட்டதாகத் தெரிகிறது.