சிறை பிடிக்கும் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள்
டெல்லி: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் சிறை பிடிக்கும் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளாக விற்பதாகவும், அதற்கு மறுக்கும் பெண்களை அவர்கள் சித்ரவதை செய்து கொல்வதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கிமூனின் சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் முக்கிய நகரங்களைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றனர். இவ்வாறு நகரங்கள் மற்றும் கிராமங்களை அவர்கள் கைப்பற்றும் போது அங்குள்ள பெண்களை சிறைப் பிடித்து, ஆண்களைக் கொன்று விடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு சிறை பிடிக்கப் படும் பெண்கள் பாலியல் அடிமைகளாக விற்கப் படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் சிறப்பு பிரதிநிதி சைனாப் பாங்குரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இணையதள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-
கிராமங்களை கைப்பற்றும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் முதலில் ஆண்கள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் என தனித்தனியே பிரித்து நிற்கவைப்பர். பின்னர் அவர்களில் ஆண்கள் மற்றும் சிறுவர்களைக் கொன்று விட்டு, பெண்கள் மற்றும் சிறுமிகளை மட்டும் அவர்கள் சிறை பிடிப்பர்.
சிறுமிகளை நிர்வாணமாக்கி அவர்களின் கன்னித்தன்மையை பரிசோதித்துப் பார்க்கும் தீவிரவாதிகள் பின்னர் அவர்களின் அழகிற்கு தக்க வகை வகையாக தரம் பிரிப்பார்கள். அவர்களில் மிகவும் அழகான பெண்களை அதிக விலைக்கும், மற்றவர்களை குறைந்த விலைக்கும் என பாலியல் அடிமைகளாக விற்று விடுகிறார்கள்.
இவ்வாறு தீவிரவாதிகளின் உத்தரவுக்கு அடிபணியாத பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறது. தீவிரவாதிகளின் இந்தக் கொடுமைக்கு சம்மதிக்காத 20 வயது பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதாக மீட்கப் பட்ட பெண்களில் சிலர் கூறக் கேள்விப்பட்டேன்.
அதேபோல், பாலியல் அடிமைகளாக விற்கப்பட்ட மூன்று பெண்கள் எலி விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். ஆனால், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய தீவிரவாதிகள், பின்னர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பாலியல் அடிமைகளாகும் சித்ரவதைக்குப் பயந்து பெண்கள் பலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால், இஸ்லாமிய பெண்கள் தலைக்கு முக்காடு இடும் துணிகளைக் கூட தீவிரவாதிகள் பறித்துள்ளனர்.
இது போன்ற பாலியல் கொடுமைகள் வேறெந்த போர் சமயங்களில் கூட நடந்ததில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications