12 ராணுவ அதிகாரிகளின் தலையை வெட்டிக் கொடூரமாக கொன்ற லிபியா ஐ.எஸ் தீவிரவாதிகள்
கெய்ரோ: லிபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 12 ராணுவ அதிகாரிகளை கொடூரமாக தலையை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
லிபியா நாட்டில் நீண்ட காலமாக அதிபராக இருந்த முகமது கடாபி 2011 ஆம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது.

இதைப் பயன்படுத்தி நாட்டின் சில பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அவர்கள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிலரை ஏற்கனவே சிறை பிடித்து இருந்தனர். இந்த நிலையில் சபரதா நகரை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் சில பகுதிகளை கைவிட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பின்வாங்கினார்கள்.
அப்போது தங்கள் பிடியில் இருந்த 12 ராணுவ அதிகாரிகளை தலை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய பிணம் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. அங்கு ராணுவத்தினருக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இன்னும் பல நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications