வங்கதேசத்தில் பதற்றம்! நொறுக்கப்பட்ட இஸ்கான் கோயில்! போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்
தாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருக்கும் இந்து கோயில் ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் இந்து கோயில் ஒன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா அமைப்பு எந்த விதமான கண்டனங்களை அல்லது எதிர்ப்புகளைப் பதிவு செய்யவில்லை என்று கொல்கத்தா இஸ்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து கோயில் மீது தாக்குதல்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இஸ்கான் ராதாகாந்தா கோயில் மீது சில மர்ம நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்தத் தாக்குதலில் அக்கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்துவிட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோவை வங்கதேச இந்துக்களின் குரல் என்ற அமைப்பு தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக அங்கிருந்த பக்தர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

150 பேர்
இது தொடர்பாக ஹிந்து அமெரிக்கன் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மார்ச் 17 அன்று இரவு 8 மணிக்கு டாக்காவில் உள்ள வாரி தானா பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலை ஹாஜி ஷஃபியுல்லா தலைமையில் 150 பேர் தாக்கி உள்ளனர். கோயிலை முற்றிலுமாக அடித்து நொறுக்கிய அவர்கள், உள்ளே இருந்த கோயில் சிலைகள் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைக் கொள்ளையடித்தனர். இந்த தாக்குதலின் போது குறைந்தது 3 இந்து பக்தர்கள் காயமடைந்தனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடும் கண்டனம்
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ், "இந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் எதுவும் கூறுவதில்லை. ஹோலி கொண்டாட்டத்தின் சமயத்தில் இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க வேண்டும் எனச் சொல்லும் ஐநா அமைப்பு, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து எதுவும் கூறுவதில்லை. இந்த நாடுகளில் சிறுபான்மையினர் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர், உடைமைகளை இழந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் என்பது அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக உள்ளது. கடந்த ஆண்டு, துர்கா பூஜை சமயத்தில் வங்கதேசத்தின் கொமிலா நகரில் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. இதனால் அங்கு கடும் வன்முறை ஏற்பட்டது. இந்த மோசமான வன்முறையில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்துக்கள் அல்லது இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போது, வங்கதேச போலீசார் நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகக் குற்றச்சாட்டுகளும் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications