பிரஸ்ஸல்ஸ் தொடர் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு !
பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று காலை நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேரும், மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற மற்றொரு குண்டு வெடிப்பில் 20 பேரும் பலியாயினர். இந்த இரு சம்பவங்களிலும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் (இந்திய நேரம் பிற்பகல் 1.30) அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு வெடிகுண்டை தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த வெடிகுண்டு தாக்குதலால் குண்டு வெடித்ததில் விமான நிலைய கூரை இடிந்து விழுந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இச்சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 96 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர்.
இந்த வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன், இது ஒரு வெறுக்கத்தக்க செயல் என்று கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் சார்லஸ் கூறுகையில், பிரஸ்ஸல்ஸ் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது ஒரு கண்மூடித்தனமான, கோழைத்தனமாக தாக்குதல். எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், வெடிப்பொருட்களுடன் விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் புகுந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
பாரிஸில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளியை 4 நாட்களுக்கு முன்னர் பிரஸ்ஸல்ஸ் காவல்துறையினர் பிடித்தனர். இதையடுத்து இன்று தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications