பிளாக்குகள் மூலம்... ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பெண் தீவிரவாதிகள்!
ஆம்ஸ்டர்டாம்: பிளாக்குகள் மூலமாக ஐரோப்பிய பெண்களை சிரியாவுக்கு எதிரான போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பெண் தீவிரவாதிகள் இழுத்து வருவது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான அபு பக்கீர் அல் பக்தாதி, தனி இஸ்லாமிய நாட்டை அறிவித்தார். சிரியா மற்றும் ஈராக்குக்கு இடையிலான பல பகுதிகளை இணைத்து இந்த தனி நாட்டை அறிவித்தார் அவர். அதன் பிறகு உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் இந்த அமைப்பின் போரில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதற்கு யாரும் எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. வக்கீல்கள், நீிதிபதிகள், பொறியாளர்கள், டாக்டர்கள், என்ஜீனியர்கள் என வாழ்க்கையின் பல்வேறு தரப்பையும் சேர்ந்தவர்களுக்கு அல் பக்தாதி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று நூற்றுக்கணக்கானோர் இந்த அமைப்பில் வந்து இணைந்தனர். தொடர்ந்து இணைந்தபடி உள்ளனர். இவர்களில் பெண்களும் கணிசமாக உள்ளனர் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் இளம் பெண்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் செக்ஸ் அடிமைகளாக வைத்திருப்பதாக கருதப்பட்டது. ஆனால் வீட்டு வேலை செய்வது உள்ளிட்ட பல வேலைகளுக்காகவும் அவர்கள் எடுப்பதாக தகவல்கள் தெரிவித்தன. தற்போது இந்தப் பெண்கள் வேறு பல வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த மேரி என்ற பெண் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இவரது 19 வயது மகள் வெனிஸ்ஸா ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளார்.
எனது மகள் என்னிடம் பேசியபோது, தனது கணவர் மற்றும் நண்பர்களுக்காக சமையல் செய்வதாக கூறினாள். நண்பர்கள் என்று அவள் கூறியது அமைப்பில் இடம் பெற்றுள்ள போராளிகளைத்தான். அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் அவள் அடிக்கடி பேசுவாள். சக போராளிகளுடன் இணைந்து பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுத் தர ஆர்வம் காட்டுகின்றனர். அதிக குழந்தைகள் பிறந்தால், போராட்டத்திற்கு கூடுதலாக ஆட்கள் கிடைப்பார்கள் என்பதால் இப்படி அறிவுறுத்தப்படுகிறதாம்.
வெனிஸ்ஸாவின் தேர்வு தவறானது. இது எங்களுக்கு வருத்தம் தருகிறது. அவள் திரும்பி வருவது போலத் தெரியவில்லை. எனவே அடிக்கடி அவளுடன் பேசுவதை நான் தொடர்கிறேன் என்றார் அவர்.
இதற்கிடையே ஐஎஸ் அமைப்பின் மீது ஈர்க்கப்படும் பல இளம் பெண்கள் பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிற சமூக வலைதளங்களில் அவற்றைப் பற்றி பிரபலப்படுத்துகிறார்கள். மேலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பதிலும் ஈடுபடுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள பெண்கள் தாங்கள் போராளிகளுடன் சாப்பிடுவது உள்ளிட்டவை குறித்த புகைப்படங்களையும்,செய்தியையும் வெளியிடுகிறார்கள். மேலும் தங்களது கணவரின் தீரச் செயல் குறித்தும் புளகாங்கிதப்படுகிறார்கள். இந்த அமைப்பில் சேருவதை பெரிய விஷயமாக சொல்கிறார்கள்.
ஏகே 47 துப்பாக்கியை எப்படிப் பயன்படுத்துவது, தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் பொருட்கள் எவை, சூசைட் பெல்ட் தயாரிப்பது எப்படி, எதிரிகளைக் கொல்லும்போது கிடைக்கும் சந்தோஷம் என்ன என்பது குறித்தும் அதில் விவரிக்கிறார்கள்.
மேரியின் மகள் வெனிஸ்ஸா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த பெண்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில்தான் வசித்து வருகிறாராம். சிரியாவுக்கு அவர் வந்து சேர்ந்ததும், ஒரு போராளியை அவருக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர் அவர் துருக்கி எல்லைப் பகுதி அருகே உள்ள நகருக்கு இடம் பெயர்ந்துள்ளார். வெனிஸ்ஸாவின் கணவர் ஒரு ஐரோப்பியர்தான். அவருக்கு 20களில் வயதாம். இவர் சமீபத்தில் இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளாராம்.
இஸ்லாமியர்களைப் போலவே இந்தப் பெண்களும் கூட ஷரியா சட்டத்தைப் பின்பற்றுகிறார்களாம். ஐரோப்பாவிலிருந்து வந்துள்ள இவர்களுக்கு இந்த சட்டங்கள், வித்தியாசமாக இருக்கிறதாம். இது வேடிக்கையாக இருப்பதோடு ஆச்சரியமாகவும்இருப்பதாகஅவர்கள் தங்களது பிளாக்குகளில் எழுதுகின்றனர்.
மேலும் 16 முதல் 24 வயது வரையிலான பெண்கள் மத்தியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்து ஆர்வமும், ஆச்சரியமும் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications