நைஜீரியா: வேளாண் கல்லூரியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு… 50 மாணவர்கள் பலி
அபுஜா: நைஜீரியாவில் வேளாண் கல்லூரிக்குள் புகுந்து தீவிரவாதிகள், சரமாரியாக சுட்டதில் 50 மாணவர்கள் பலியானார்கள்.
நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள யோப் மாகாணத்தில் குஜ்பா நகரில் ஒரு வேளாண் கல்லூரி உள்ளது. அங்குள்ள விடுதியில் நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.அப்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் கும்பலாக திடீரென்று புகுந்தனர். ஒவ்வொரு அறையாக சென்று சரமாரியாக சுட்டனர். தப்பி ஓடிய மாணவர்களையும் இறக்கமின்றி சுட்டு தள்ளினர். வகுப்பறைகளுக்கும் தீ வைத்தனர். இதில் 50 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் கிடைத்ததும் ராணுவத்தினர் சென்று பலியான 26 மாணவர்களின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. கல்லூரியில் படித்த சுமார் 1,000 மாணவர்கள் தப்பி ஓடி விட்டதாக கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறினார்.
நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் என்ற தீவிரவாத அமைப்பு, தனி நாடு கேட்டு போராடி வருகிறது. இவர்கள் அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த மாதத்தில் மட்டும் போகோ ஹராம் தீவிரவாதிகளால் அப்பாவி பொதுமக்கள் 143 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் ராணுவ உடை அணிந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.