ஈரான் ராணுவ தலைவரே மரணம்? இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்.. ஈரானின் முக்கிய தலைகள் பலி!
டெஹ்ரான்: ஈரான் நாட்டின் முக்கியமான ராணுவ தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விமானத் தாக்குதல்களுடன் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், ஈரான் நாட்டிற்குள் சில நாசவேலைகள் மற்றும் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஈரானின் முக்கிய ராணுவ தலைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல்கள்
இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான சில தகவல்களின்படி, ஈரான் புரட்சிகர காவல்படையின் உயர்மட்டத் தலைவர் கொல்லப்பட்டது மட்டுமல்லாமல், மூத்த இராணுவ தளபதிகள், முக்கிய கல்வியாளர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

ஈரானின் துணை இராணுவப் புரட்சிகரப் படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், ஜெனரல் ஹொசைன் சலாமிக்கு என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை இருந்தன. 1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஈரானின் புரட்சிகரப் படை, நாட்டின் முக்கிய அதிகார மையங்களில் ஒன்றாகும்.
ஈரான் அட்டாக்
தற்போது நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களுக்கு எப்படி பதிலளிப்பது, அடுத்து என்ன செய்வது என்பது பற்றி ஈரான் விரைவில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமான நபர்கள் மீதும், இராணுவ தளங்கள் மீதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கு கண்டிப்பாக ஈரான் பதிலடி தரும்.
இஸ்ரேலிய ராணுவம் தெஹ்ரானைச் சுற்றியுள்ள முக்கியமாக ஆறு ராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளதாக, பெயர் குறிப்பிடப்படாத மூத்த ஈரானிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஈரானின் மிக முக்கியமான பார்சின் இராணுவ வளாகம் குறிவைக்கப்பட்டதாகவும், ராணுவத் தளபதிகளுக்கான இரண்டு வளாகங்களில் உள்ள குடியிருப்பு வீடுகள் மற்றும் பல குடியிருப்பு கட்டிடங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
முக்கியமாக இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் அணு ஆயுத மாஸ்டர் மைண்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் அப்பாசி மற்றும் தெஹ்ரான்சி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய இரண்டு அமெரிக்க அதிகாரிகள், "இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது" என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் "இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அமெரிக்காவின் ஈடுபாடு அல்லது உதவி எதுவும் இல்லை" என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications