“9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்துவிட்டோம்”.. அறிவித்தது இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி!
தெஹ்ரான்: இஸ்ரேல் இராணுவம் 9 ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களைக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்கும் வகையில் கொல்லப்பட அணு விஞ்ஞானிகளின் பெயர்களையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களும் ஈரானிய அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கியமான நபர்களாக இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பை குறி வைத்து கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ஈரானின் அணு ஆயுத கொள்கை தொடர்பான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்துள்ளது. ஈரானின் அணு ஆயுத முகாம் மற்றும் ராணுவ தளவாடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் தற்காப்பிற்காக இத்தாக்குதலை தன்னிச்சையாக தொடுத்திருப்பதாக அமெரிக்க விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு ஈரானுக்கு எதிராக தொடங்கிய 'ஆபரேஷன் ரைசிங் லயன்' தாக்குதல்களில் ஆறு அணு விஞ்ஞானிகளை கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. தற்போது ஒன்பது அணு சக்தி விஞ்னானிகள் மற்றும் நிபுணர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரான் மேற்கொண்ட அணு ஆயுத முயற்சிகளுக்கு இந்த விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. "கொல்லப்பட்ட அனைத்து விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஈரானிய அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க நபர்களாக இருந்தனர், மேலும் அணு ஆயுதங்களை உருவாக்குவதில் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த அனுபவத்தைக் கொண்டிருந்தனர்" என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி பொறியியல் நிபுணர் ஃபெரேடூன் அப்பாசி, இயற்பியல் நிபுணர் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி, வேதியியல் பொறியியல் நிபுணர் அக்பர் மொட்டலேபி சதே, பொருள் பொறியியல் நிபுணர் சயீத் பார்ஜி, இயற்பியல் நிபுணர் அமீர் ஹசன் ஃபகாஹி, உலை இயற்பியல் நிபுணர் அப்துல்-ஹமீத் மினௌஷெர், இயற்பியல் நிபுணர் மன்சூர் அஸ்காரி, அணுசக்தி பொறியியலில் நிபுணர் அஹ்மத் ரெசா சோல்ஃபாகரி தர்யானி, மற்றும் இயக்கவியல் நிபுணர் அலி பகோய் காதிரிமி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ராணுவத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒன்பது பேரும் கொல்லப்பட்டனர். அதே தாக்குதல்களில் ஆறு உயர் அதிகாரிகள் உட்பட டஜன் கணக்கான ஈரான் ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications