உள்ளே வந்த மொசாட்! 24 மணி நேரத்திற்குள் இரு தாக்குதல்கள்.. ஈரானை நிலைகுலைய வைக்கும் இஸ்ரேல்
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வெறும் 24 மணி நேரத்திற்குள் ஈரானில் 200 தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலும் ஈரானும் நேரடியாகப் போருக்குச் செல்லும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவே இது உள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் அதிகரித்தே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் படை திடீரென இஸ்ரேலில் இறங்கிய தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் ஆரம்பித்தது. இதற்காக ஹமாஸுக்கு எதிராகப் போரையே இஸ்ரேல் அறிவித்தது. தொடர்ச்சியாகக் காசா மீது சரமாரி தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கு
இடையில் ஹிஸ்புல்லா உட்பட மற்ற அமைப்புகள் உடனும் இஸ்ரேல் மோத வேண்டி இருந்தது. இந்தச் சூழலில் இப்போது நேரடியாகவே இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஈரான்
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முயல்வதாக சில ஆண்டுகளாகவே அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் அளவுக்கு யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் போனால் அது ஆபத்து என்று கருதி, டிரம்ப் நிர்வாகம் அதைத் தடுக்க பேச்சுவார்த்தையில் இறங்கியது. சில காலகமாகவே பேச்சுவார்த்தை போனாலும் கூட இதில் ஒரு தீர்வு எட்டப்படவில்லை. ஈரான் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ரெடியாக இல்லை.
என்ன காரணம்!
இதுவே இஸ்ரேல் தாக்குதலை நடத்தக் காரணமாக இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை ரெடி செய்வதால் இஸ்ரேலுக்கு என்ன பாதிப்பு என நீங்கள் கேட்கலாம். இப்போது மத்திய கிழக்கில் இஸ்ரேல் வசம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன. தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவே வல்லுநர்கள் பலரும் கூறுகிறார்கள். அதாவது மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஈரானும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்துவிட்டால் இஸ்ரேலுக்கு இருக்கும் அட்வான்டேஜ் இல்லாமல் போகும். மேலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் உச்சத்தில் இருப்பதால் ஈரான் வசம் அணு ஆயுதங்கள் செல்வதை இஸ்ரேலுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கும். இதன் காரணமாகவே அதைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியது. அதன் ஒரு பகுதியாகவே இப்போது 24 மணி நேரத்திற்குள் இரு முக்கிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
முதல் தாக்குதல்
இந்திய நேரப்படி வெள்ளி அதிகாலை இஸ்ரேல் தனது முதல் தாக்குதலை நடத்தியது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் தொடங்கிப் பல இடங்களை இஸ்ரேல் குறிவைத்துத் தாக்கியது. சுமார் 100 இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஈரானின் ராணுவ தளபதிகள், மூத்த அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தங்கம், பங்குச்சந்தை என அனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டன.
2வது தாக்குதல்
இதற்கிடையே இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இஸ்ரேல் மற்றொரு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் உட்பட 100 இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்குப் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் உளவுப்படையான மொசாட் வழிகாட்டுதல் படியே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வெறும் 24 மணி நேரத்திற்குள் ஈரானில் உள்ள 200 தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications