காஸாவில் இஸ்ரேலின் வெறியாட்டம் தொடருகிறது: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது!
காஸா: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் வெறியாட்டம் 11வது நாளாக தொடருகிறது. இத்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும், காஸா முனைப்பகுதியை ஆட்சி செய்யும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு யுத்தம் மூண்டுள்ளது.
கடந்த 8-ந் தேதி தொடங்கிய சண்டையில், காஸா முனைப்பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் இதுவரை 300 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

யுத்த நிறுத்தம்
இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் இரு தரப்பும் தற்காலிக யுத்த நிறுத்தம் செய்ய ஐ.நா. அழைப்பு விடுத்தது. அதை ஏற்று நேற்று முன்தினம் இரு தரப்பிலும் 5 மணி நேர யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது.

தரைவழி தாக்குதலுக்கு உத்தரவு
ஆனால் சண்டை நிறுத்தம் முடிந்ததும், தரை வழி தாக்குதல் நடத்தும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரதமர் உத்தரவிட்டார். இஸ்ரேலுக்குள் ஹமாஸ் இயக்கம் ஊடுருவ முடியாத வகையில் சுரங்கப்பாதைகளை தகர்க்கும்படியும் அவர் ஆணையிட்டார். இதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது.

தீவிர தாக்குதல்கள்
இதையடுத்து இஸ்ரேல் உடனடியாக தரைவழி தாக்குதலை தொடங்கியது. நேற்று அதிகாலையில் ஹமாஸ் நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

பலி எண்ணிக்கை 300
இந்த தரைவழி தாக்குதல்களில் நேற்று மட்டும் 60 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இஸ்ரேல்தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் இதுவரை 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஐ.நா. பொதுச்செயலர்
ஹாஸா முனையில் இஸ்ரேல் தரைவழி தாக்குதல்களை தொடங்கி இருப்பதை அடுத்து, அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலியாவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications