காசாவில் இன்று தொடங்கும் போர் நிறுத்தம்.. இஸ்ரேலுக்கு ஹமாஸ் போட்டுள்ள கண்டிஷன்கள் என்னென்ன! பரபர
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் தொடர்ந்த நிலையில், இன்று அங்கே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தது. முதலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் சற்று தடுமாறினாலும் கூட அதன் பிறகு இஸ்ரேல் சரமாரி தாக்குதலை நடத்தி வருகிறது.

தாக்குதல்கள் தீவிரமாக இருந்த நிலையில், அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளிலும் போர் நிறுத்தம் வேண்டும் என்று வலியுறுத்தின. இருப்பினும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
போர் நிறுத்தம்: இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மற்றும் பிணையக் கைதிகள் வெளியேற்றம் இன்று வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. கத்தார் மத்தியஸ்தனாம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மஜீத் அல்-அன்சாரி கூறுகையில், "வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்குச் சண்டை நிறுத்தம் தொடங்கும்... மேலும் அதே நாளில் உள்ளூர் நேரப்படி மாலை 4:00 மணிக்குப் பிணையக் கைதிகளில் முதல் பேட்ஜ் விடுவிக்கப்படுவார்கள்" என்றார். அதாவது இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு இந்தப் போர் நிறுத்தம் தொடங்க உள்ளது. மேலும், இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
பிணையக் கைதிகள்: இதில் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 13 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதன்படி நான்கு நாட்களில் மொத்தம் 50 பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், குறைந்தது 50 பிணையக் கைதிகளை விடுவிக்க வேண்டும், இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தானத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இது காசாவில் உள்ள 24 லட்சம் மக்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்: கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேலின் எல்லை நகரங்களில் அதிரடியாக நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், மோசமான தாக்குதலை நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே கடந்த காலங்களிலும் மோதல் இருந்துள்ள போதிலும், இந்தளவுக்கு ஒரு மோசமான தாக்குதல் சமீப காலத்தில் நடந்ததே இல்லை. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 240 பேர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. காசா மீது தொடர்ச்சியாகக் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல், அங்குச் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தின. காசாவில் உள்ள ஹமாஸ் சுரங்கங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்காக காசாவில் இருக்கும் மருத்துவமனைகள் மீதும் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.













Click it and Unblock the Notifications