இஸ்ரேல் - அமெரிக்காவால் உயிருக்கே ஆபத்து.. கமேனியை காப்பாற்ற ஈரான் எடுத்த முடிவு.. இறங்கிய ‛எலைட்’
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கூட இன்னும் பதற்றம் தொடர்ந்து வருகிறது. போர் நிறுத்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி விட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இதனால் இன்னும் பதற்றம் முழுமையாக தணியவில்லை. இந்நிலையில் தான் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை ‛எலைட்' குழுவினர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கியது. இருநாடுகளும் ஏவுகணைகள் மூலம் மாறி மாறி தாக்கி கொண்டன. இது போதாது என்று அமெரிக்காவும் உள்ளே நுழைந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசியது.

இதற்கு நேற்று ஈரான் பதிலடி கொடுத்தது. கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து நிலைமை மோசமானது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இஸ்ரேல், ஈரான் நாடுகளிடம் அமெரிக்கா நடத்திய போர் நிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது.
இதையடுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வந்துள்ளது. போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் போர் நிறுத்தத்துக்கு முன்பாகவே இஸ்ரேல் குறிவைத்து அனுப்பிய ஏவுகணைகள் தான் அது. போர் நிறுத்தம் செய்த பிறகு ஏவுகணைகள் ஏவப்படவில்லை என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தான் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரை கொல்ல இஸ்ரேல், அமெரிக்கா திட்டமிடலாம் என்பதால் அவர் ரகசிய இடத்தில் உள்ளார். இந்த இடம் குறித்து யாருக்கும் எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ‛எலைட்' குழுவினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்த ‛எலைட்' குழு என்பது ஈரானை சேர்ந்த உயரடுக்கு பாதுகாப்பு வழங்கும் குழுவாகும். இதில் உள்ளவர்களின் விவரங்கள் மிகவும் ரகசியம் காக்கப்படும். தற்போது அயதுல்லா அலி கமேனிக்கு பாதுகாப்பு வழங்கும் நபர்களும் கூட பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இஸ்ரேல், அமெரிக்காவுடன் ரகசிய தொடர்பு வைத்து ஆயுதங்களால் தாக்கி விட கூடாது என்பதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரானில் இஸ்ரேல் உளவுத்துறையான ‛மொசாட்' உறுப்பினர்கள் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் அந்த சோதனைக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் அயதுல்லா அலி கமேனிக்கு தற்போது பாதுகாப்பு வழங்கும் ‛எலைட்' குழு உறுப்பினர்களின் பெயர், விவரங்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையின் உயரதிகாரிகளுக்கு கூட தெரிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அயதுல்லா அலி கமேனி கடந்த 1989 ம் ஆண்டு முதல் ஈரானின் உயர்மட்ட தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு இப்போது வயது 86. இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய சில நாட்களிலேயே இஸ்ரேல் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சி மாற்றம் தான் பதற்றத்தை குறைக்க ஒரே வழி என்று தெரிவித்தது. அதுமட்டுமின்றி அவரை தீர்த்து கட்டவும் இஸ்ரேல் திட்டமிட்டது.
ஆனால் முன்கூட்டியே இஸ்ரேலின் சதித்திட்டத்தை அறிந்த அயதுல்லா அலி கமேனி தனது குடும்பத்துடன் பங்கருக்குள் சென்றார். ஆனால் அதனையும் அமெரிக்கா மோப்பம் பிடித்தது. அயதுல்லா அலி கமேனி இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும். ஆனாலும் அவரை கொல்லும் திட்டம் இப்போது இல்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
மேலும் நேற்றைய தினம் கூட இஸ்ரேல், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிரட்டல் விடுத்தது. ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி தனது மனைவி, குழந்தைகளுடன் 12 மணி நேரத்தில் உடனே தப்பிச்செல்ல வேண்டும். ஈரான் மதத் தலைவர் தங்கள் பட்டியலில் இருக்கிறார். கடவுள் அவரை பாதுகாக்கட்டும் என்று எச்சரிக்கை செய்து இருந்தது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட அயதுல்லா அலி கமேனி ரகசிய இடத்தில் மிகவும் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கும் நபர்கள் மூலம் சூழப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications