ஈரானின் அணுசக்தி மையத்தை குறிவைத்து இஸ்ரேல் திடீர் தாக்குதல்.. மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஈரானின் அணுசக்தி மையத்தை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள இரு முக்கிய அணுசக்தி மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்கு நிலைமை மேலும் மோசமாக மாறியுள்ளது.
ஈரானிடம் அணு ஆயுதங்கள் குறித்து அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஈரான் மீது திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஈரான் தளபதி, அணு விஞ்ஞானிகள் உட்படப் பலரும் கொல்லப்பட்டனர். இது மத்திய கிழக்கில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.

மீண்டும் தாக்குதல்
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து 100+ டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது. இருப்பினும், அதை இஸ்ரேல் முறியடித்து வருவதாக அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே 24 மணி நேரத்திற்குள் ஈரான் மீது இரண்டாவது தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம்
ஈரானின் அணுசக்தி மையத்தை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியானது.. ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கு பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அணுசக்தி மையத்திற்கு அருகே குண்டுகள் வெடித்தாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தாக ஈரான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏன் முக்கியம்
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதே இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஈரானில் உள்ள நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரண்டு அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது ட்விட்டரில், "இஸ்பஹான் பிராந்தியத்தில் உள்ள அணுசக்தி தளத்தை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது. இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் துல்லியமான உளவுத்துறை வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை போர் விமானங்கள் இஸ்பஹான் பகுதியில் உள்ள ஈரான் அணுசக்தி தளத்தின் மீது தாக்குதலை முடித்துள்ளன. இந்த தளம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரிகன்வர்ஷன் பிராசரஸ் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் செயல்பாட்டில் யுரேனியம் செறிவூட்டலுக்குப் பிறகு இது அடுத்த கட்டமாகும்.
அதிகரிக்கும் பதற்றம்
இந்த தாக்குதல் உலோக யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு கட்டமைப்பு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை அழித்தது" என்று தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் ஈரான் மீது இஸ்ரேல் 2வது பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மீதும் தாக்குதல்
இது ஒரு பக்கம் இருக்க இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல்களும் நடந்து வருகிறது. தனது நாட்டின் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணைகள் வருவதாகவும் அதை அழிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்படுவதாகவும் அவை அழிக்கப்படுவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஈரானிடம் தற்போது வரை அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால், அதை உருவாக்கும் பணிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதைத் தடுக்கவே டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அது சுமுகமாக முடியாத நிலையில், இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications