5,000 ராக்கெட்டுகள்- மரண ஓலம்! இஸ்ரேல் Vs பாலஸ்தீனம் ஹமாஸ்- Al-Aqsa Flood ஆபரேஷன்- 10 பாயிண்ட்ஸ்!
ஜெருசலேம்: இஸ்ரேலை இலக்கு வைத்து பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்; இஸ்ரேல் பகுதிகளை நோக்கி சரமாரியாக 5,000 ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இதனால் இஸ்ரேல் போர் நிலை பிரகடனத்தை வெளியிட்டிருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

பாலஸ்தீனம், இஸ்ரேல் விவகாரம் என்பது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. முதல் உலகப் போரில் மத்திய கிழக்கில் ஒட்டோமான் பேரரசு இருந்தது. இப்பேரரசு முதல் உலகப் போரின் முடிவில் வீழ்ந்து பிரிட்டன் கட்டுப்பாட்டில் போனது. அப்போது அரபு நாட்டவர் பெரும் எண்ணிக்கையிலும் யூதர்கள் சிறிய அளவில் குடியேறத் தொடங்கினர். யூதர்களும் பாலஸ்தீன மக்களும் தங்களது பூர்வீகம் என அப்பகுதியை உரிமை கோரினர். அப்போது யூதர்களுக்காக சர்வதேசம் கரிசனம் காட்டிக் கொண்டிருந்தது. 2-ம் உலகப் போர் காலத்தில் யூதர்களின் குடியேற்றம் கிடுகிடுவென அதிகரித்தது. இப்பின்னணியில் யூதர்கள் vs அரபு மக்கள் இடையே மோதல்கள் வெடித்தன; இன்னொரு பக்கம் பிரிட்டனின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் வெடித்தன. இதனால் பிரிட்டன் அங்கிருந்து வெளியேறியது. 1948-ம் ஆண்டு யூதர்கள் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இஸ்ரேல் எனும் நாடு உருவானது. யூதர்கள், பாலஸ்தீனர்கள் மீதும் பெரும் போரை நடத்தி அவர்களது பகுதிகளையும் ஆக்கிரமித்தனர். ஜெருசலேம் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பொது தலைநகராக இருக்கிறது. அன்று தொடங்கிய யுத்தம் இன்று வரை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் விஸ்வரூபம் எடுத்திருப்பது ஏன்? என்னதான் அங்கு நடந்து வருகிறது?
- -பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதி இஸ்ரேல் எல்லைப் பகுதி . மேற்கு கரையை ஹமாஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இங்கிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்துவதும் இப்பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் வழக்கமான ஒன்றாகிப் போனது. கடந்த சில மாதங்களாக இந்த தாக்குதல் படுதீவிரமாக நடந்து வருகிறது.
- கடந்த சில வாரங்களாக இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் பாலஸ்தீனத்தில் உக்கிரமடைந்து வன்முறை வெடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் பாலஸ்தீனர்கள் ஊடுருவலைத் தடுக்க அதிநவீன முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு கருவிகளுடன் பிரம்மாண்ட தடுப்பு வேலியை இஸ்ரேல் கட்டி உள்ளது. இதற்கு ஹமாஸ் தீவிரவாதிகள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
- இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு, மத்திய பகுதிகள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். சுமார் 5,000 ராக்கெட் தாக்குதல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி உள்ளனராம்.
- இஸ்ரேலுக்குள் ஊடுருவதை நோக்கமாக கொண்ட இந்த ஆபரேஷனுக்கு 'Al-Aqsa Flood எனவும் ஹமாஸ் தீவிரவாதிகள் பெயரிட்டுள்ளனராம்.
- ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி தர இஸ்ரேலும் யுத்தத்தில் இறங்கிவிட்டது. இதற்கான எச்சரிக்கையாக ஜெருசலேம் நகரில் இடைவிடாமல் போர் அபாய எச்சரிக்கையான சைரன் ஒலி எழுப்பப்பட்டு கொண்டே இருக்கிறதாம்.
- இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக 'போர் நிலை' யுத்தத்துக்கு தயாரான நிலையில் இருக்க பாதுகாப்பு படையினருக்கு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
- இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலான் கூறுகையில், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் பெரும் தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறது. யூதர்கள் இப்போது விடுமுறை காலத்தை அனுபவிக்கும் நிலையில் இத்தாக்குதல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலில் இது பேரழிவை ஏற்படுத்துகிறது என்றார்.
- இஸ்ரேல் கொஞ்சமும் எதிர்பார்க்காத தருணத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் உக்கிரமான யுத்தத்தை முன்னெடுத்திருப்பது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு படையினருடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஹமாஸ் தீவிரவாதிகள் இந்த திடீர் யுத்தத்துக்கு கடும் விலையை கொடுக்கப் போகிறார்கள் என எச்சரித்து கொண்டே இருக்கிறது இஸ்ரேல்.
- தற்போதைய நிலையில் ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் 11 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications