“இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை தீர்த்துக் கட்டுவோம்”.. ஈரான் உளவுத்துறை பகிரங்க மிரட்டல்!
தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என ஈரான் உளவுத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது.
இஸ்ரேல் - காசா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களை அழிக்கும் வகையில், இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ், ஹிஸ்புல்லா படையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் நேற்று இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதால் உலக அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்ததாகவும், காஸா, லெபனானில் உள்ள பயங்கரவாதிகள் கற்றுக் கொண்ட வேதனையான பாடத்தை ஈரானும் விரைவில் கற்றுக் கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் அவர்களை மீண்டும் தாக்குவோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் வலிமையும் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் உறுதியும் இஸ்ரேலுக்கு இருப்பதை ஈரான் மறந்துவிட்டது எனத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட ஜோ பைடன், இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், ஈரானின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க படைகளுக்கு பைடன் அறிவுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொல்லப் போவதாக ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோரை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டு பெயர்களை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் ஹீப்ரு மொழியில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், இஸ்ரேலிய பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களை தீர்த்துக் கட்டுவோம் எனவும் ஈரான் உளவுத்துறை மிரட்டல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications