ஈரானின் அணுசக்தி திட்டத்தில் பெரிய பின்னடைவு.. இனி அணு ஆயுதம் தயாரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
தெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் யுரேனியம் செறிவூட்டும் திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை ஈரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாலும், இப்போதைக்கு அதை உருவாக்க முடியாது. சுருக்கமாக சொல்வதெனில் அணுசக்தி தொழில்நுட்பத்தில் ஈரான் பின்னோக்கி சென்றிருக்கிறது.
இது குறித்து சர்வதேச அணு விஞ்ஞானிகள் கூறியுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவர்கள், ஈரான் தனது அணு சக்தி திட்டத்தில் எந்த அளவுக்கு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதை விளக்கியுள்ளனர்.

பின்னோக்கி போகும் ஈரான்
ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டன் ஆய்வு மையத்தின் நிபுணர் ஃபேபியன் ஹின்ஸ் கூறுகையில், "இஸ்ரேலின் தாக்குதல் வெறுமென ராணுவ அதிகாரிகளை மட்டும் குறி வைத்து இருக்கவில்லை. அணுசக்தி மையத்தையும், அணு விஞ்ஞானிகளையும் குறி வைத்திருக்கிறது. இதில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் செயல்பாடு கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்த பாதிப்பு, அந்நாட்டின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை ஒரு வருடம் வரை பின்னுக்கு தள்ளும்.
இஸ்ரேலின் ஸ்டேட்டர்ஜி
காரணம் ஈரானின் அணுசக்தி மையத்திற்கு தேவையான மூலப்பொருட்களை சப்ளை செய்பவர்களையும் இஸ்ரேல் குறி வைத்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது இஸ்ரேலின் இப்போதைய உத்தி, அணுசக்தி மையத்தின் மூளையாக செயல்படுபவர்களை கொல்வதும், முடிந்தவரை உபகரணங்களை சேதப்படுத்துவதும்தான்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் எதை குறி வைத்தது?
அணு ஆயுத நிபுணர் டேவிட் ஆல்பிரட் இதை இன்னும் விளக்கமாக கூறியுள்ளார். அதாவது, "அணுசக்திக்கு யுரேனியம் தேவை. பூமியிலிருந்து எடுக்கப்படும் யுரேனியத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. அதை செறிவூட்ட வேண்டும். 'சென்ட்ரிஃபியூஜ்' எனும் செயல்முறையில் இதை செய்வார்கள். ஒரு பொருளை வேகமாக சுற்றுவதன் மூலம், அதிலிருந்து அடர்த்தியான பாகங்களை நீக்க முடியும். ஈர துணியில் மண் ஒட்டிக்கொண்டால் வேகமாக உதறுகிறோம் அல்லவா! அதற்கு பெயர்தான் 'சென்ட்ரிஃபியூஜ்'. இதே நடைமுறையில்தான் யுரேனியம் செறிவூட்டப்படுகிறது.
நேற்று ஏன் தாக்குதல்?
இந்த 'சென்ட்ரிஃபியூஜ்' திறனை குறைப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். ஈரானில் இரண்டு யுரேனியம் செறிவூட்டும் தளங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மூன்றாவது ஒரு தளத்தை கட்டி முடித்து அதை செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தது. இப்படி இருக்கையில்தான் நேற்று இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியது.
முதல் தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள 'நடான்ஸ்' எனும் பகுதியில் யுரேனியம் செறிவூட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தாக்குதலில், இதன் மேற்பரப்பு அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மின்சார விநியோக கட்டிடம், அவசரகால மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்கள் உட்பட மின் உள்கட்டமைப்பும் தகர்க்கப்பட்டிருக்கிறது. இங்கு 10,000 'சென்ட்ரிஃபியூஜ்' இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. இவை யுரேனியத்தை 5% வரை செறிவூட்டும். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக சில சென்ட்ரிஃபியூஜ்கள் சேதமடைந்திருக்கலாம். ஆனால், அதன் அடிப்பகுதியில் உள்ள எந்த கட்டமைப்பும் பாதிக்கப்படவில்லை.
இரண்டாவது தாக்குதல்
'நடான்ஸ்' பகுதியை விட, 'ஃபோர்டோ' எனும் மலைக்கு அடியில்தான் அதிக அளவுக்கு சென்ட்ரிஃபியூஜ்' இயந்திரங்கள் இருக்கின்றன. இந்த இயந்திரங்கள் யுரேனியத்தை 60% வரை செறிவூட்டும். மட்டுமல்லாது இது ஆயுதங்கள் தயாரிக்கும் தளத்திற்கு மிக அருகில் இருக்கிறது. இந்த மலையை உடைத்து, உள்ளே இருக்கும் செறிவூட்டும் மையங்களை சேதப்படுத்தும் அளவுக்கு தேவையான ஆயுதங்கள் இஸ்ரேலிடம் இல்லை. நேற்று நடந்த தாக்குதலில் இந்த மையத்தின் நுழைவு வாயிலில் மட்டுமே சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இதை முழுமையாக அழிக்கும் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இந்த குண்டை எடுத்து வந்து போடும் அளவுக்கு பெரிய விமானங்களும் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றன. இஸ்ரேலிடம் இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications