லெபனானுடன் வெடிக்கும் போர்? இஸ்ரேலுக்காக பெரும் படையை அனுப்பிய அமெரிக்கா! மத்திய கிழக்கில் பதற்றம்
ஜெருசலேம்: காசா போருக்கு மத்தியில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் என்பது உச்சமடைந்துள்ளது. இதனால் விரைவில் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா தனது 50 ஆயிரம் படை வீரர்கள், 6 போர் விமானங்கள், 12 போர் கப்பல்களை இஸ்ரேலுக்காக அனுப்பி வைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் - லெபனான் இடையே போர் வெடிக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இயங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயா மோதல் போராக மாறி உள்ளது. காசாவில் நுழைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்டை நாடான லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் ஹிஸ்புல்லா அமைப்பினரை தற்போது இஸ்ரேல் நிலைக்குலைய செய்துள்ளது. அவர்கள் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை அடுத்தடுத்து வெடிக்க வைத்து இஸ்ரேல் பதிலடி கொடுத்தது.
பேஜர், வாக்கி டாக்கியின் பேட்டரி பகுதயில் பிடிஇஎன் வெடிப்பொருளை வைத்து இந்த தாக்குதலை இஸ்ரேலின் ‛மொசாட்' உளவு அமைப்பு நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா ராக்கெட், ஏவுகனை தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. தற்போது இரு நாடுகளும் ஆக்ரோஷமாக மோதி வருகின்றன.
இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ளது. இஸ்ரேலின் பேஜர் தாக்குதல், வாக்கி டாக்கி தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளும் தற்போது ஏவுகனை தாக்குதலை தொடங்கி உள்ளன. இதற்கு முன்பு ஏவுகனை தாக்குதல் மட்டுமே அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இது மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த பதற்றம் தான் தற்போது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால் தற்போது உக்ரைன் மீது ரஷ்யா ஒரு பக்கம் போர் தொடுத்து வருகிறது. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த 2 போரை தொடர்ந்து தான் தற்போது 3வதாக இஸ்ரேல் - லெபனான் இடையே போர் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த போருக்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தும் வகையில் தான் இருநாடுகளும் தற்போது மாற்றி மாற்றி மல்லுக்கட்டி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் (Yoav Gallant) அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினுடன் பலமுறை பேசியிருந்தார். அப்போது அவர் போர் நடவடிக்கை பற்றிய தகவல்களை கூறியிருந்தார். அப்போது போரின் புதிய அத்தியாயம் இனி தொடங்க உள்ளது என தெரிவித்து இருந்தார். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை மனதில் வைத்து தான் அவர் இதனை தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தான் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது போர்வீரர்களின் எண்ணிக்கை மற்றும் போர் விமானங்கள், போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. பொதுவாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா படைகளை சேர்ந்த 34 ஆயிரம் வீரர்கள் இருப்பார்கள். ஆனால் கசா மீதான போர் நடவடிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்கில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ள பதற்றத்தால் வீரர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர 12 போர்க்கப்பல்கள், அதிகபட்சமாக 6 போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்க நிலைநிறுத்தி உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்களை பொறுத்தவரை கிழக்கு மத்திய தரைக்கடல் முதல் ஓமன் வளைகுடா வரை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கம் எனும் பலம்வாய்ந்த 3 போர்க்கப்பல் ஓமன் வளைகுடாவில் உள்ளன. செங்கடலில் 2 கப்பல்கள் உள்ளன. கிழக்கு மத்திய தரைக்கடலில் 6 அமெரிக்க போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் விமானம் தாங்கும் போர்க்கப்பல்களும், நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட போர்ககப்பல்களும் அடங்கும்.
அதேபோல் போர்விமானங்களும் நாசக்கார வேலைகளுக்கு என்றே தயாரிக்கப்பட்டவையாகும். மின்னல் வேகத்தில் எதிரி நாடுகளுக்குள் புகுந்து அட்டாக் செய்யும் வகையில் இந்த விமானங்கள் உள்ளன. ஆனால் விமானங்களின் இருப்பிடம் பற்றி அமெரிக்க தகவலை வெளியிட மறுத்துள்ளது. உண்மையில் அமெரிக்காவின் இந்த செயலுக்கு பின்னணியில் இஸ்ரேலை பாதுகாப்பது தான் முக்கிய நோக்கமாக உள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலை ஆதரித்து வருகிறது. இதனால் இஸ்ரேலுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை சமாளிக்க அமெரிக்கா உதவ முழுவீச்சில் தயாராகி உள்ளது. மேலும் காசாவை தொடர்ந்து இஸ்ரேல் லெபனான் உடன் போரை தொடங்கும் பட்சத்தில் இஸ்லாமிய நாடுகள் வேடிக்கை பார்க்காது. இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும். குறிப்பாக ஈராக், சிரியாவில் உள்ள ஆயுதக்குழு, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழுவினர் இஸ்ரேலை தாக்க முயற்சிக்கலாம்.
இதில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க தான் அமெரிக்க இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. லெபனான் உடனான மோதல் அதிகரிக்கும் பட்சத்தில் அல்லது வேறு நாடுகள் அல்லது ஈரான் ஆதரவு ஆயுத குழுக்கள் ஏதேனும் இஸ்ரேலை தாக்கும் பட்சத்தில் இந்த படைகளை அமெரிக்காக இஸ்ரேலுக்காக களமிறக்கும் என்று கூறப்படுகிறது அமெரிக்காவின் இந்த செயலால் இஸ்ரேல்- லெபனான் இடையேயான தாக்குதல் அதிகரித்து போர் உருவாகிறதா? அப்படி உருவானால்அது 3வது உலகப்போராக மாறிவிடுமோ என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications