இஸ்ரேல் குண்டு வீச்சு: காஸா முனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாலஸ்தீனர்கள் பலி
காஸா: காஸா முனையில் நேற்று இஸ்ரேல் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
காஸா முனையை ஆளுகிற ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் சண்டை மூண்டது. தீவிர சண்டைகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை நிறுத்தமும் அமல் படுத்தப்பட்டது. ஆனபோதும், சண்டை நிறுத்தத்தையும் மீறி இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இருப்பினும் அவர்கள் இடையே நிரந்தர சண்டை நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான மறைமுக சமரச பேச்சை எகிப்து முன்னின்று நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சு வார்த்தை கடந்த 19-ந் தேதி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், காஸாமுனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீச்சை தீவிரப்படுத்தி வருகின்றன. ஹமாஸ் தீவிரவாதிகளும் இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட் வீச்சு நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், நேற்று காஸாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேல் நேற்று குண்டுவீச்சு நடத்தியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். பலியானவர்களில் கணவன், மனைவி, அவர்களது 2 குழந்தைகள் அடங்குவார்கள்.
நேற்றைய தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் கூறும்போது, "காஸாமுனையில் தீவிரவாதிகளின் 20 இலக்குகளை குறிவைத்து எங்கள் தரப்பில் குண்டு வீச்சு நடத்தப்பட்டது" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications