நெதன்யாகுவை ஏமாற்றிய ஹமாஸ்.. மீண்டும் காசாவில் இறங்கிய இஸ்ரேல் படைகள்! இரவோடு இரவாக பரபரப்பு
டெல் அவிவ்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியைத் தொடர்ந்து மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும், சில வாரங்களிலேயே அந்தப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. காசா மீது மிக பெரிய தாக்குதலை நடத்த இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து நாம் பார்க்கலாம்.
மத்தியக் கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வந்தது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் தொடர்ச்சியாக முயன்றன. இறுதியில் அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு இஸ்ரேல்- ஹமாஸுக்கு அழுத்தம் கொடுத்தார். அதன் பிறகே போர் முடிவுக்கு வந்தது. கடந்த அக்டோபர் 10ம் தேதி இது தொடர்பான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மீண்டும் மோதல்
இந்தச் சூழலில் தான் இரு தரப்பிற்கும் இடையே இப்போது மோதல் வெடித்துள்ளது. ஹமாஸ் படையினர் தங்கள் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாகச் சாடிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் உடனடியாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.
ஏமாற்றிய ஹமாஸ்?
தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஒப்பந்தத்தின்படி வேறு ஒரு கொல்லப்பட்ட பணய கைதியின் உடலைத் தருவதற்குப் பதிலாக ஏற்கனவே தரப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடற்பாகங்களை ஹமாஸ் மீண்டும் ஒப்படைத்ததாக இஸ்ரேல் சாடியுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் இதுபோல அறிவித்ததால் ஹமாஸும் மற்றொரு பணயக்கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இது தொடர்பாக ஹமாஸ், "இஸ்ரேலின் அத்துமீறல்களால் உடலை ஒப்படைக்கும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.. இஸ்ரேலின் எந்த ஒரு அத்துமீறலும் உடல்களைத் தேடுதல், தோண்டி எடுத்தல் மற்றும் மீட்பதற்கான முயற்சிகளைத் தடுக்கும்" என்றும் அது எச்சரித்தது.
பின்னணி
டிரம்ப் தலைமையில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் கீழ் கொல்லப்பட்ட 28 பணய கைதிகளின் உடலை ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் 16வது உடலை ஹமாஸ் திங்கள்கிழமை ஒப்படைத்தது. ஆனால், இஸ்ரேல் தடயவியல் பரிசோதனை நடத்தியதில்.. அது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்கப்பட்ட அதே பணயக்கைதி ஒருவரின் உடல்பாகங்கள் எனத் தெரியவந்தது. இதுவே பதற்றத்திற்கு முதல் காரணம்.
தாக்குதல்
இதற்கிடையே ரஃபா நகரில் இஸ்ரேல் படைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.. இதற்காகவே இஸ்ரேல் பதிலடி கொடுத்தாக அந்நாட்டின் ராணுவ அதிகாரி தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே நெதன்யாகுவும் ஹமாஸ் மீது கடுமையான தாக்குதலை நடத்த உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்ட உடன் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் காசாவில் தாக்குதலை நடத்தியுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய இந்த புதிய தாக்குதலில் 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர்கள் யார்.. எங்கு தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் பகிரப்படவில்லை. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா சொல்வது என்ன
அதேநேரம் அங்குப் போர் நிறுத்தம் தொடர்வதாகவும் இது இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட மோதல் மட்டுமே என அமெரிக்கத் துணை அதிபர் வேன்ஸ் தெரிவித்தார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இதுபோல சிறு மோதல்கள் இருந்தாலும் கூட போர் நிறுத்தம் தொடரவே செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications