சுரங்கப் பாதைகளை அவ்வளவு நம்பிய ஹமாஸ்.. சரியாக அங்கே தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.. பதற்றம்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், இப்போது காசாவில் நடத்தும் தரைவழி படையெடுப்பை இஸ்ரேல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய ஹமாஸ், அதன் பிறகு இஸ்ரேல் நாட்டிற்குள் வந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், பலரைப் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

அந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. காசா மீது முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், இப்போது மெல்ல முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல் போர்: இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் இப்போது ஹமாஸ் பதுங்கி இருக்கும் சுரங்கப் பாதைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன. காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அனுமதிக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இருப்பினும், அதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். ஹமாஸ் படையை முற்றிலுமாக அழிக்கும் வரை காசாவுக்கு எந்தவொரு மனிதாபிமான உதவிகளும் செல்லக் கூடாது என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது.
இஸ்ரேல் படைகள் இன்று காசாவின் அடியில் அமைந்துள்ள ஹமாஸ் படையின் சுரங்கப் பாதைகளை குறிவைத்துத் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஹமாஸ் இந்த சுரங்கப் பாதையைத் தான் தனது மிகப் பெரிய பாதுகாப்பு அரணாகப் பார்க்கிறது. பல நூறு கிமீ நீளத்திற்கு இந்த சுரங்கம் இருக்கும் நிலையில், அதை வைத்து இஸ்ரேல் தாக்குதலைச் சமாளிக்க முடியும் என்றே ஹமாஸ் நினைத்திருந்தது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்கக் காசா சுரங்கப்பாதையில் இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
சுரங்கப் பாதைகள்: ஹமாஸுக்கு எதிரான போரில் இது முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகையில், "கடந்த சில நாட்களில் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை சுமார் 300 இலக்குகளைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது. காசாவில் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அங்குள்ள காசா படைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறோம். வரும் காலத்தில் தாக்குதலை மேலும் தீவிரமாக நடத்த இருக்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஒரு பெண் போர் வீரரையும் இஸ்ரேல் மீட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து மொத்தம் 239 பேரை ஹமாஸ் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற நிலையில், அதில் ஒருவர் இப்போது மீட்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் அவரது உடல்நிலை நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீவிரமாகும் போர்: காசாவுக்கு செல்லும் எரிபொருள், உணவு மற்றும் சுத்தமான நீர் ஆகியவற்றுக்கு இஸ்ரேல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மறுபுறம் தாக்குதலையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. வரும் நாட்களில் ஹமாஸ் படையைக் குறித்து வைத்து இஸ்ரேல் மேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தும் என்றே கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் இப்போதைக்கு போர் முடியாது.. மேலும் தீவிரமடையவே செய்யும் என்பது உறுதியாகிறது.












Click it and Unblock the Notifications