"ஈரான் மிக பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.." அலறிய சைரன்கள்.. பாய்ந்த ஏவுகணைகள்.. இஸ்ரேல் எச்சரிக்கை
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் சில அப்பாவி மக்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஈரான் இதற்கு மிக பெரிய விலையை கொடுக்க வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ஈரான் கடந்த சில நாட்களாகவே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா உடனான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் போடுவதை விரும்பாதது போலவே தெரிந்தது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

தாக்குதல்
ஏற்கனவே இதன் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை கணித்திருந்தது. அதேபோல ஈரான் மீது வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மிக பெரிய தாக்குதலை நடத்தியது. 24 மணி நேரத்திற்குள் ஈரான் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து பெரிய தாக்குதல்களை நடத்தியது. இது ஈரானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
ஈரான் பதிலடி
இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. ஜெருசலேம் உட்பட இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், ஏமனில் இருந்தும் கூட இஸ்ரேல் மீது ஏவுகணைகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இஸ்ரேலில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேலில் அப்பாவி மக்கள் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் திட்டவட்டம்
மொத்தமாக இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசியல் வட்டாரத்தில் இருந்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத இஸ்ரேல் அரசியல் தலைவர் ஒருவர் கூறியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக அந்த நபர் கூறுகையில், "பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதற்கு மிக பெரிய விலையை ஈரான் கொடுத்தே தீர வேண்டும். ஈரான் நாட்டில் நாங்கள் எதை தாக்கினோம்.. எதை தாக்காமல் விட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும்" என்றார்.
நிலைமை மோசம்
இரு தரப்பும் இது போல மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு நிலைமை மிக மோசமாகவே இருக்கிறது. ஏற்கனவே இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் சுமார் 10% வரை உயர்ந்துவிட்டது. அதேபோல அமெரிக்கா தொடங்கி உலகெங்கும் பங்குச்சந்தை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சந்தையில் தங்கம் விலையும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் விரைவில் முடிந்தால் மட்டுமே எல்லாம் நார்மல் ஆகும். மோதல் சில வாரங்கள் நீடித்தால் கூட அது இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications