கமேனி கதையை முடித்த இஸ்ரேல்.. இனி யார் வந்தாலும் காலி செய்வோம் என பகிரங்க மிரட்டல்! பரபர ஈரான்!
டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மோஜ்டபா காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய தலைவராக யார் வந்தாலும் அவரை படுகொலை செய்வோம் என இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் மோதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட வடு நீங்குவதற்குள் இஸ்ரேல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக ஈரான் அரசின் ஊடகத்தாலேயே அறிவிக்கப்பட்டது.
கமேனி மட்டுமல்லாமல் அந்த தாக்குதலில் அவரது குடும்பத்தினரும் உயிரிழந்ததாக ஈரான் தரப்பு கூறியுள்ளது. காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி கோஜஸ்தேஹ் பாகெர்ஸதேவும் பின்னர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஈரானின் அடுத்த உச்ச தலைவராக காமேனியின் மகன் மோஜ்டபா காமேனி தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புரட்சிகர இஸ்லாமியப் படைகளின் அழுத்தத்தின் பேரில் இந்தத் தேர்வு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த சூழலில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் "ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும், அவர் பெயர் எதுவாக இருந்தாலும், எங்கு பதுங்கியிருந்தாலும் அவரை தேடி அழிப்போம். இதற்காக அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய ஈரான் ஆட்சிக்கு மீள்கட்டமைப்பு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும், ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை மாற்றும் சூழல் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலிய பிரதமருக்கும், படைத்துறைக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், காமேனியின் இறுதி அஞ்சலி நிகழ்வு மார்ச் 4ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரான் தரப்பும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஒரு மூத்த ஈரான் தலைவர், "இஸ்ரேல் ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானில் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு அஞ்சி பேச்சுவார்த்தைக்கு செல்லமாட்டோம். அமெரிக்கா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சமரசத்திற்கான அடித்தளம் எதுவும் இல்லை. எங்கள் விருப்பப்படி இந்தப் போர் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படும் நேரத்தில் இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை, பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், மத்திய கிழக்கு பகுதியில் சூழல் மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.












Click it and Unblock the Notifications