இஸ்ரேல் அரசு கவிழந்தது.. 2 ஆண்டுகளில் 4வதுமுறையாக தேர்தல்.. பெரும் சிக்கலில் நெதன்யாகு
பாலஸ்தீனம்: நிதி நிலை அறிக்கையை திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிறைவேற்ற நாட்டின் நாடாளுமன்றம் தவறியதை அடுத்து நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கவிழ்ந்தது.
இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலை சந்திக்க போகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் 23 அன்று தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
ஏழு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது கூட்டணி கட்சியான ப்ளூ அண்ட் ஒயிட் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகியோர் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
என்ன சொல்கிறார்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது பற்றி கூறுகையில், "ப்ளூ அண்ட் ஒயிட் கூட்டணி ஒப்பந்தத்தை முறித்தக் கொண்ட விலகியதுடன், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் ஒரு முறை எங்களை தேவையில்லாமல் தேர்தல்களுக்கு எங்களை இழுத்துச் சென்றுள்ளது. ஆனால் நாங்கள் தேர்தலை விரும்பவில்லை. அதனால் எதிர்த்தோம். ஆனால் அதேநேரம் நாங்கள் தேர்தலை கண்டு பயப்படவில்லை. ஏனென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்!" என்றார்.
பொருளாதார பிரச்சனை
இதனிடையே ப்ளூ அண்ட் ஒயிட் தலைவர் பென்னி காண்ட்ஸ், நெதன்யாகு எதிர்கொள்ளும் ஊழல் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு பேசுகையில். : "பிரதமர் தனது விசாரணையில் கவனம் செலுத்துகிறார், பொது நலனில் கவனம் செலுத்தவில்லை. பொருளாதார ஸ்திரத்தன்மையில் நாட்டை வலுவடையச் செய்வதற்குப் பதிலாக, முழு நாட்டையும் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற மோசமான நிலைக்கு இழுத்தக் கொண்டிருக்கிறார் என்று கடுமையாக விமர்சித்தார்.
பெரும்பான்மை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல்வேறு கட்ட பேச்சுக்கு பின்னர் ஏப்ரல் மாதத்தில் நெத்தன்யாகுவின் கூட்டணியில் இணைய காண்ட்ஸ் ஒப்புக் கொண்டார், "அவசர கோலத்தில் கூட்டணி அரசு அமைக்ககப்பட்டதாக அப்போதே விமர்சிக்கப்பட்டது.
கூட்டணி முறிவு
பிரதமர் பதவியை இருகட்சியினரும் சுழற்சி முறையில் வகிப்பார்கள் என்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பிரதமர் பதவியில் நெதன்யாகு முதல் 18 மாதம் வகிப்பார் என்றும். பின்னர் வரும் 18 மாதம் காண்ட்ஸ் பதவி வகிப்பார் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சியின் ஒத்துழைப்பின்மையால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு காலக்கெடுவிற்கு முன்னர் பட்ஜெட்டை நிறைவேற்ற தவறியதால், நெதன்யாகு அரசு கவிழந்தது.