பாலஸ்தீனத்தை உளவு பார்க்க முடியாது: இஸ்ரேல் உளவுப்படை திடீர் போர்க்கொடி
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தை உளவு பார்க்க போவதில்லை என்று இஸ்ரேஸ் உளவுத்துறை அதிகாரிகள் அந்த நாட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் '8200' உளவு படை பிரிவை சேர்ந்த 10 அதிகாரிகள் உட்பட 43 உளவாளிகள் அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தில், "பாலஸ்தீன பகுதிகளில் உளவு பார்த்து அளிக்கும் தகவல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், அரசியல் ஆதாயத்துக்காக அந்த உளவுத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உளவு பணியை தொடர, இனிமேலும் எங்கள் மனசாட்சி அனுமதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த செய்தி இஸ்ரேல் நாட்டில் வெளியாகும் முன்னணி பத்திரிகையொன்றில் இன்று வெளியாகியுள்ளது.
இந்த கடிதம் ராணுவ உளவு இயக்குநர் அவிவ் கோச்சாவி உள்ளிட்ட சில உயரதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ராணுவ ரேடியோவுக்கு பேட்டியளித்துள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத இஸ்ரேஸ் ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், "உளவு தகவல்களை தன்னை பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பிறரை ஆளுவதற்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. பாலஸ்தீனத்தை உடைப்பதும், அந்த சமூகத்தை பலவீனப்படுத்துவதும் இஸ்ரேல் நோக்கமாக மாறிவிட்டது" என்று கூறியுள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் அரசோ, இதுபோன்ற கடிதம் எழுதப்பட்டுள்ளதை மறுத்துள்ளது. சிறுபான்மையின குழுக்கள், விளம்பர யுத்திக்காக இதுபோன்ற செய்திகளை பரவ விட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications