உச்சத்தில் போர்! வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து.. இஸ்ரேலியர்களை பிணைய கைதியாக பிடித்த ஹமாஸ்! ஷாக்
காசா: இஸ்ரேல் நாட்டில் மிக இப்போது மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களை ஹமாஸ் படையினர் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக பகீர் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதில் பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பலன் எதுவும் ஏற்படவில்லை.

இந்தச் சூழலில் நேற்றைய தினம் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாலஸ்தீனில் இருந்து ஹமாஸ் படைகள் குண்டு வீசி தாக்குதலை நடத்தினர். காலை 6.30 மணிக்கு இந்தத் தாக்குதல் ஆரம்பித்த நிலையில், அடுத்த 30 நிமிடங்களில் சுமார் 5000 ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இதனால் அங்கே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பிணையக் கைதிகள்: இதனிடையே சண்டை உச்சக்கட்டத்தில் இருக்கும் காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் படையினர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 பேரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ள நிலையில், அது பெரும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவிஸ் "அல்-அக்ஸா போரில் பல எதிரி வீரர்களை அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் கைப்பற்றும் காட்சிகள்" என்று கூறப்பட்டுள்ளது. பின்னணியில் ஹீப்ருவில் எழுத்துக்கள் இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் போது இந்தச் சம்பவம் இஸ்ரேல் எல்லையில் ஈரெஸ் கிராஸிங் பகுதியில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
வீடியோ: சமூக வலைத்தளங்களில் இந்த போர் தொடர்பாக வேறு சில வீடியோக்களும் பரவி வருகிறது. அதில் ராணுவ நடுரோட்டில் வீரர்களின் உடல்கள் சிதறிக் கிடப்பது தெளிவாகப் பதிவாகி உள்ளது. இருப்பினும், இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.
ஒரு பக்கம் ஏவுகணை தாக்குதல், மற்றொரு புறம் பாலஸ்தீன பயங்கரவாதிகள் காசா பகுதியிலிருந்து ஊடுருவல் என இரண்டு பக்கங்களில் இருந்தும் மிக மோசமான தாக்குதல் அரங்கேறி உள்ளது. இதில் பல நூறு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
நெதன்யாகு: இதற்கிடையே இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் ஹமாஸ் தாக்குதல் குறித்தும் அதற்கு என்ன மாதிரியான பதிலடி கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் தாக்குதலையும் ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இஸ்ரேல் சார்பில் இதற்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரு தரப்பும் மாறி மாறி மோசமாகத் தாக்கிக் கொள்ளும் நிலையில், வரும் நாட்களில் மோதல் மேலும் உக்கிரமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications