"மோடி, டிரம்ப் செயல்கள் ஜனநாயக அச்சுறுத்தல்?" இத்தாலி பிரதமர் அடுத்து சொன்ன வார்த்தை! பரபரப்பு
ரோம்: இத்தாலி நாட்டின் பிரதமரான ஜியோர்ஜியா மெலோனி வலதுசாரி சித்தாந்தம் கொண்டவர்.. சர்வதேச அளவில் டிரம்ப், மோடி உள்ளிட்ட வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் வென்று வரும் நிலையில், இது தொடர்பாக மெலோனி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இடதுசாரிகள் இங்குத் திட்டமிட்டு பொய்களைப் பரப்பி வருவதாகவும் உலகம் இனியும் அதை நம்பாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வலதுசாரி அரசுகள் அமைந்து வருகின்றன. வலதுசாரி சித்தாந்தம் கொண்ட தலைவர்களை மக்கள் பிரதமர்களாகவும் அதிபர்களாகவும் தேர்வு செய்து வருகிறார்கள்.

பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி
இதில் தவறு எதுவும் இல்லை என்ற போதிலும், இடதுசாரிகள் இதைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். வலதுசாரி தலைவர்கள் ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவதாகவும் இதைப் பிரச்சினையை உருவாக்கும் எனக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இது தொடர்பாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் இடதுசாரி தலைவர்கள் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், தன்னை போன்ற வலதுசாரி தலைவர்கள் மீது திட்டமிட்டு பொய்களைப் பரப்ப முயல்வதாகவும் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே போன்ற தலைவர்கள் சர்வதேச அளவில் பழமைவாத இயக்கத்தை உருவாக்கி வழிநடத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
உலகம் நம்பாது
வலதுசாரி தலைவர்கள் தேசிய நலன்கள் மற்றும் தங்கள் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசும்போது, அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்று இடதுசாரிகள் சொல்வது மிகவும் தவறான போக்கு என்றும் அவர் சாடினார். மேலும், இடதுசாரிகளின் பொய்களை உலகம் இனி நம்புவதில்லை என்றும் தேசியவாத தலைவர்கள் மீது இடதுசாரிகள் முன்வைக்கும் பொய்கள் இனியும் பலன் தராது என விமர்சித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "டிரம்பின் தலைமை மற்றும் ஸ்டைல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. டிரம்ப் உட்பட வலதுசாரி தலைவர்களின் எழுச்சி இடதுசாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவர்களை எரிச்சலடைய செய்து கோபத்தை ஏற்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள பழமைவாத தலைவர்கள் சர்வதேச பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது இடதுசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.
ஜனநாயக அச்சுறுத்தலா
90களில் (முன்னாள் அமெரிக்க அதிபர்) பில் கிளிண்டனும், (முன்னாள் இங்கிலாந்து பிரதமர்) டோனி பிளேயரும் உலக இடதுசாரி தாராளவாத கட்டமைப்பை உருவாக்கினர். அப்போது அவர்களைச் சிறந்த அரசியல்வாதிகள் எனச் சொன்னார்கள். ஆனால், இன்று அதையே நான், டிரம்ப், மோடி உள்ளிட்டோர் பேசுகிறார்கள். ஆனால், அது ஜனநாயக விரோதம், ஜனநாயக அச்சுறுத்தல் என்கிறார்கள்.. இது இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோத குடியேற்றம் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதைத் தடுக்க டிரம்ப் அல்லது மோடியைப் போலக் கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும். அதுதான் எங்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும். எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்கும். அதேநேரம் இந்த போராட்டத்தில் நான் தனித்து இல்லை என்பது எனக்குத் தெரியும். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அதுவே இடதுசாரிகளை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறது" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications