இத்தாலியில் பயங்கரம்.. உலகிலேயே அதிகம் பேர் கொரோனாவால் சாவு.. சீனாவையும் முந்தியது
ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால் உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்த நாடு என்ற மோசமான வேதனையான சாதனையை இன்று முதல் சுமந்துள்ளது இத்தாலி. இதன் மூலம் உலகில் கொரோனாவால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடான சீனாவையே முந்தியுள்ளது இத்தாலி.
Recommended Video
COVID-19 என்று அழைக்கப்படும் கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமே மிகப்பெரிய யுத்தத்தை கையில் எடுத்துள்ளன. ஆனால் கண்ணுக்கு தெரியாத அந்த கிருமியால் உலகமே பேரழிவை சந்தித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல் உலகப்போரை விட மோசமான பாதிப்பை உலகம் முதல்முறையாக சந்தித்துள்ளது. அந்த வைரஸ் விரைவாக பரவுவதை கட்டுப்படுத்த உலகமே போரை முடுக்கிவிட்டுள்ளது,

மக்கள் முடக்கம்
பல நாடுகளும் எல்லைகளை பூட்டி உள்ளன. தங்கள் நாட்டினர் உள்பட புதிதாக வெளிநாடுகளில் இருந்து யாரையும் அனுமதிக்கவில்லை. பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன. வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சுற்றுலாத்தளங்கள் உலகம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வர வேண்டாம் என்று உலகின் பல நாடுகள் எச்சரித்து வருகின்றன.

அமெரிக்கா பாதிப்பு
உலகம்முழுவதும் கொரானா வைரஸ் தொற்றால் 10049 பேர் இறந்துள்ளார்கள். ஒட்டுமொத்தமாக 246522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவின் 27 நாடுகளும், அமெரிக்காவும், ஈரான், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கொரோனா வைரஸ் தொற்றால் இயல்பு வாழ்க்கை முடங்கி பொருளாதாரம் சரிந்து திணறி வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

427 பேர் பலி
இத்தாலியில் தான் உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பேர் இறந்துள்ளனர். இதுவரை பிப்ரவரி மத்தியில் தொடங்கி இத்தாலியில் இதுவரை 3405 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 427பேர் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளார்கள். அத்துடன் 41000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் முதல் நாடு
இந்நிலையில் 3405 பேர் இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் இறந்துள்ளதால் சீனாவையும் இத்தாலி முந்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3245 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இத்தாலியைம் சீனாவையும் ஒப்பிட்டால் சீனா மிக அதிகம், அதாவது 81000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இத்தாலியில் 41000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பார்த்தால் சீனாவில் வெறும் 4 சதவீதம் பேர் தான் இறந்துள்ளார்கள். ஆனால் இத்தாலியில் 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளார்கள்.

அமெரிக்காவில் 13000
ஒட்டுமொத்தமாக ஆசியாவையும் ஐரோப்பாவையும் ஒப்பிட்டால் ஐரோப்பாவில் தான் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகும். கொரோனா வைரஸ் தொற்று இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயின், ஈரான், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 150000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 13000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இதுவரை இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications