தெ.ஆப். தேர்தல் வெற்றியை மண்டேலாவுக்கு சமர்ப்பிக்கிறோம்... அதிபர் ஜூமா அறிவிப்பு
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியை மறைந்த நெல்சம் மண்டேலாவுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமா.
தென்ஆப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடி தன் வாழ்நாளில் அதிகநாட்களை சிறையில் கழித்தவர் நெல்சன் மண்டேலா. வயது மூப்பின் காரணமாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த நெல்சன் மண்டேலா சமீபத்தில் காலமானார்.
இந்நிலையில், கடந்த 7-ந்தேதி தென்னாப்பிரிக்காவில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வென்று மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றியுள்ளது.
மொத்தம் உள்ள 400 இடங்களில் ஆளுங்கட்சி 249 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. 89 இடங்களில் வென்ற ஜனநாயகக்கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமருகிறது.
தங்களது தேர்தல் வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில், ‘இந்த வெற்றியை மடிபா (நெல்சன்மண்டேலா) நினைவுக்கு நாங்கள் அர்ப்பணிக்கிறோம். அவரது பாதையில் எங்களது பயணம் தொடரும். இதே நாளில் தான் (10&ந்தேதி) நெல்சன்மண்டேலா நாட்டின் முதலாவது கறுப்பின அதிபராக பதவி ஏற்றார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தேர்தல் வெற்றி, நாட்டின் பொருளாதார ஏற்றத்துக்கும், சமூகமேம்பாட்டுக்கும் ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு நிர்மாணிப்பு திட்டத்தினை தொடர்ந்து நாங்கள் மேற்கொள்வதற்கு, மக்கள் வழங்கிய உரிமம் என எடுத்துக்கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.