60 நாட்களுக்குள் ஜாதவ் மேல்முறையீடு செய்யலாம்! - பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ், 60 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் பாதுகாப்பு துறை தொடர்ந்த வழக்கில் அந்நாட்டின் ராணுவ நீதிமன்றம் நேற்று முன்தினம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை ராணுவ தளபதியும் உறுதி செய்துவிட்டார்.

இது இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ள இந்தியா, இது திட்டமிட்ட கொலை என்று கூறியுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் பற்றி பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் சபையில் அந்த நாட்டின் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் பேசுகையில், "குல்பூஷண் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து 60 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய லாம். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது.
இந்த பிரச்சினையில் இந்தியா சொல்வதுபோல் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை. இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலையும் ஆகாது. காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பதுதான் திட்டமிட்ட கொலை. குல்பூஷண் ஜாதவ் மீதான வழக்கு விசாரணை 3 மாதங்கள் நடைபெற்றன. எனவே அவர் அவசர அவசரமாக தண்டிக்கப்பட வில்லை,'' என்றார்.












Click it and Unblock the Notifications