கொட்டும் பனியிலும் அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் - வீடியோ பதிவுகள்
மினசோட்டா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான மினசோட்டாவில் தமிழர்கள் ஒன்று திரண்டனர்.
வெள்ளைப் பனி சூழ்ந்த இடத்தை தேர்வு செய்து, ஆதரவு அட்டைகளை ஏந்திய படி முழக்கங்கள் எழுப்பினர்.

கடுங்குளிராக இருந்த போதிலும் கைகளில் க்ளவுஸ், குளிருக்கான கோட்டுகள் அணிந்து அணிவகுத்து வந்திருந்தனர்.
வெண்பனிக்கு மத்தியில் நின்று கொண்டு ஆதரவு முழக்கங்கள் எழுப்பியது சிலிப்பூட்டுவதாக இருந்தது.
சியாட்டல்
அமெரிக்காவின் வடமேற்கு நகரமான சியாட்டல் மாநகரப்பகுதியிலும் தடையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. சியாட்டல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தலைவர் உதயகுமார், மக்கள் தொடர்பாளர் ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 50 குழந்தைகள் உட்பட 250 பேர் பங்கேற்றனர்.
இந்த அறவழிப் போராட்டம் மகாத்மா காந்தி சிலை அருகில் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அந்த வழியாக வந்த அமெரிக்கர்களும் ஜல்லிக்கட்டு பற்றி விசாரித்து தெரிந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்..வழக்கத்திற்கு மாறாக கடும் குளிர் வாட்டிய போதிலும், மிகக் குறைந்த கால அவகாசத்தில் ஏற்பாடு செய்திருந்தாலும் 250 திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சியாட்டல் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிற்றுண்டி, காபி, டீ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது
நியூயார்க்
நியூயார்க் நகரத்தின் மையப்பகுதியான டைம்ஸ் ஸ்கொயரில் நியூ யார்க் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து போராட்டம் நடந்தது
புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெறும் டைம்ஸ் ஸ்கொயரில் தமிழர்களின் கூட்டமும், ஜல்லிக்கட்டை தடை செய்யாதே என்ற முழக்கமும், அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பல அமெரிக்கர்கள் என்ன போராட்டம் என்று கேட்டுச் சென்றனர். அவர்களில் பலர் பாரம்பரியத்தை பாதுகாக்க ஆதரவு தெரிவித்தனர்.
அட்லாண்டா
கடந்த வெள்ளிக்கிழமை மதியம், அட்லாண்டா இந்திய தூதரகத்தில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் தூதர் நாகேஷ் சிங் சந்தித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு வழங்கினர்
மிகவும் பொறுமையோடு கோரிக்கையை கேட்டுக்கொண்ட தூதர் நாகேஷ் சிங், தமிழர்களின் நியாயமான உணர்வைப் புரிந்து கொள்வதாகவும், அதை அரசுக்கு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்கள் கோபால், சுவாமி நாதன் உள்ளிட்டவர்கள். 2018ம் ஆண்டிற்குள் ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலை 5 மணி அளவில் 250க்கும் மேற்பட்ட தமிழர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு வந்து இந்திய அரசே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு என்று முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு அட்லாண்டா தமிழ் சங்கம் ஆதரவைத் தெரிவித்து இருந்தது
மேரிலாண்ட்
மேரிலாண்ட் மா நிலத்தின் பால்டிமோர் மா நகரப்பகுதியான காக்கிஸ்வில் நடந்த ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர்.
பறையிசை முழக்கத்துடன் போராட்ட முழக்கமும் சேர்ந்து அந்த இடமே உணர்ச்சிமயமாகிவிட்டது. அச்சமில்லை அச்சமில்லை என்ற பாரதியார் பாடலைப் பாடி, உச்சிமீது வானிடிந்து வீழினும் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.
காக்கிஸ்வில் நகரில் நடந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டு ஏன் உருவாக்கப்பட்டது. நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்திற்கு ஜல்லிக்கட்டின் பங்களிப்பு என்ன என்பதை உயிர் சுழற்சி என்ற பட விளக்கத்துடன் விவரித்தார்கள். குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருந்தது.
ஓமஹா, நெப்ராஸ்கா
நெப்ராஸ்கா மாநிலத்தின் ஓமஹா நகரில் குறைந்த அளவிலேயே தமிழர்கள் வசித்து வருகிறார்கள். ஆனாலும் பெருமளவில் திரண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினார்கள்.
இதைப் போன்று அமெரிக்காவின் சிறிய நகரங்களில் , குறைந்த எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வந்தாலும் கூட, அவர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து ஜல்லிக்கட்டு ஆதரவு முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.
தமிழர் வசிக்கும் இடமெல்லாம் ஜல்லிக்கட்டு முழக்கம் ஒலித்தது என்றால் மிகையல்ல.












Click it and Unblock the Notifications