"ட்விட்டர் கில்லர்.." சோஷியல் மீடியாவில் பெண்களை மயக்கி.. 9 பேரை துண்டுத் துண்டாக வெட்டிய இளைஞர்
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ட்விட்டர் கில்லர் என்ற நபர் இருக்கிறார். ட்விட்டர் தளம் மூலம் ஒருவரைப் பேசி நட்பாக்கி அவரை கொன்றுவிடுவாராம். இதுபோல 9 பேரை அந்த நபர் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். தகாஹிரோ ஷிரைஷி என்ற அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
மன ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சீரியல் கில்லராக மாறுவார்கள். நமது நாட்டில் குடும்ப அமைப்புகள் வலுவாக இருப்பதால் சீரியல் கில்லர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், வெளிநாடுகளில் சீரியல் கில்லர்கள் பெரிய பிரச்சினையாகவே இருக்கும்.

ட்விட்டர் கில்லர்
அப்படி ஒரு மோசமான சீரியல் கில்லருக்கு ஜப்பான் நாட்டில் இப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் அறிமுகமாகி கொலை செய்வதே இவனது ஸ்டைல். இதன் காரணமாகவே இவனை ட்விட்டர் கில்லர் என்கிறார்கள். போலீசார் பிடிப்பதற்கு முன்பு இதேபோல 9 பேரைக் கொலை செய்துள்ளான்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
9 பேர் கொலை
டோக்கியோ அருகில் உள்ள கனகாவா மாகாணத்தின் ஜாமா நகரை சேர்ந்த நபர் தகாஹிரோ ஷிரைஷி. கடந்த 2017ஆம் ஆண்டு இவர் எட்டுப் பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் ஒன்பது பேரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 9 பேரையும் கொன்ற பிறகு அவர்களின் உடல்களையும் துண்டுத் துண்டாக வெட்டி தனது அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே புதைத்து இருக்கிறார். இந்தக் கொடூரக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டதால், அவர் "ட்விட்டர் கில்லர்" என்று அந்நாட்டில் அடையாளப்படுத்தப்பட்டார்.
மரண தண்டனை
ஜப்பான் நாட்டின் நீதித்துறை அமைச்சர் கெய்சுகே சுசுகி உத்தரவின் பெயரிலேயே தகாஹிரோ ஷிரைஷிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றத்தின் தன்மை அந்த நபரின் நோக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஷிரைஷிக்கு குற்றங்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதல்முறை
முன்னதாக, 2008ஆம் ஆண்டு டோக்கியோவினல் உள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மையத்தில் கத்தியால் பலரைக் குத்திய ஒருவருக்குக் கடந்த 2022 ஜூலை மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு அங்கு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ஜப்பானில் கடந்த அக்டோபர் மாதம் ஷிகெரு இஷிபா தலைமையிலான அரசு பதவியேற்றது. அதன் பிறகு அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஜப்பான் நடைமுறை
அதேநேரம் ஜப்பான் நாட்டிலும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் அதிகரித்தே வருகிறது. ஜப்பானைப் பொறுத்தவரை அங்குத் தூக்கிலிடுவதன் மூலம் ஜப்பானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்படும். இருப்பினும், இந்த நடைமுறை கைதிகளுக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுப்பதாக மனித உரிமைக் குழுக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எதிர்ப்பும் இருக்கு
மேலும், அங்கு மரணத் தண்டனையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜப்பானிய நீதிமன்றம் ஒன்றில் இவாவோ ஹகமடா என்பவர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்யாத குற்றங்களுக்காகத் தவறாகத் தண்டிக்கப்பட்டார். இதனால் 60 ஆண்டுகள் மரண தண்டனை கைதியாக இருந்தார். அவர் சமீபத்தில் தான் விடுதலை ஆனார். இதுபோல தவறான விசாரணைகள் இருப்பதால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், நீதித்துறை அமைச்சர் பெய்சுகே சுசுகி அதை ஏற்க மறுக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "வன்முறைக் குற்றங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, மரண தண்டனையை ரத்து செய்வது சரியல்ல. இப்போது ஜப்பானில் 105 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications