பார்லிமண்ட் பக்கமே வராத எம்பி! அதிரடியாக தூக்கிய ஜப்பான்! இது இந்தியாவில் இருந்தா அவ்வளவுதான் போலயே
ஜப்பான் நாடாளுமன்றம் இப்போது முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்திற்கு வரவே இல்லை என்பதால் எம்பி ஒருவரை அந்நாட்டு நாடாளுமன்ற அவை தகுதி நீக்கம் செய்துள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகளில் மிக மிக முக்கியமானது ஜப்பான். உலகம் இப்போது புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஜப்பான் எப்போதுமே சில அடிகளாவது முன்னேறியே இருக்கும்.
அதேபோல ஜப்பான் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின் போதும், ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தைச் சுத்தம் செய்த நிகழ்வுகளை நாம் பார்த்துள்ளோம்.

ஜப்பான்
ஆனால், அனைத்து ஜப்பான் மக்களும் இந்தளவுக்குப் பொறுப்பானவர்கள் இல்லை போல.. அதைக் காட்டும் ஒரு சம்பவம் தான் இப்போது அங்கு நடந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் யோஷிகாசு ஹிகாஷிதானி. ஜப்பான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வந்த இவர், கடந்த ஆண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்வானார். இருப்பினும், அவர் அதன் பிறகு எந்தவொரு அமர்விலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஜப்பான் மேல் சபையிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

70 ஆண்டுகளில் ஒரே நபர்
கடந்த 70 ஆண்டுகளில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒரே நபர் என்ற பெயரையும் யோஷிகாசு ஹிகாஷிதானி பெற்றுள்ளார். GaaSyy என்று அழைக்கப்படும் இவருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை அங்கு மிகக் கடுமையான ஒன்றாகும். ஹிகாஷிதானி அங்கு ஒரு சிறிய கட்சியில் உறுப்பினராக உள்ளார்.அவர் தொடர்ச்சியாக நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்குக் கடைசியாக ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், அதற்கும் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலமே விளக்கம் அனுப்பியிருந்தார்.

நடவடிக்கை
இதனால் நாடாளுமன்ற ஒழுங்கை சீர்குலைத்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற தலைவரான ஹிடெஹிசா ஒட்சுஜி உத்தரவிட்டார். ஜப்பானில் இப்போது இருக்கும் அரசியல் சாசன சட்டம் 1947இல் கொண்டு வரப்பட்டது. இதுவரை வரலாற்றில் இரண்டு முறை மட்டுமே எம்பி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 1951க்கு பிறகு நாடாளுமன்றத்தில் வராமல் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்பியாக ஹிகாஷிதானி மாறியுள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் ஹிகாஷிதானி கட்சியைச் சேர்ந்த மற்றொருவரும் எம்பியாக உள்ளார்.

அத்தனை பேரும் ஆதரவு
ஹிகாஷிதானிக்கு எதிரான தகுதி நீக்கத்திற்கு சக எம்பி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மற்ற 235 எம்பிக்களும் ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். அங்கு இருந்த அனைத்து கட்சி எம்பிகளும் நாடாளுமன்றத்திற்கு வராமல் அவை மாண்பை சீர்குலைத்தற்காக ஹிகாஷிதானியை தகுதி நீக்கம் செய்ய ஆதரவு அளித்தனர். அவருக்குப் பல முறை வாய்ப்பளித்தும் கூட ஹிகாஷிதானி நாடாளுமன்றத்திற்கு வர மறுத்துவிட்டார் என்றும் இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜப்பான் நாடாளுமன்றம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்
ஜப்பான் நாடாளுமன்றத்திற்குத் தேர்வானது முதலே ஜூலை 2022 முதல் ஹிகாஷிதானி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தான் வசித்து வருகிறார். நாடாளுமன்றத்தில் எம்பி சம்பளமாக அவர் 19 மில்லியன் யென் ($140,000) ஊதியம் பெற்றுள்ளார். இருப்பினும், ஒரு நாளும் நாடாளுமன்றத்திற்கு அவர் வந்ததே இல்லை.. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஹிகாஷிதானி முதலில் ஜப்பான் நாடாளுமன்றத்திற்குக் கடந்த வாரம் நேரில் சென்று மன்னிப்பு கேட்கவிருந்தார். இருப்பினும், கடைசி நேரத்தில் முடிவை மாற்றிக் கொண்ட அவர், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்குச் சென்றார்.

அச்சம்
ஜப்பான் திரும்பினால், போலி வழக்கில் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்றும் இதன் காரணமாகவே ஜப்பான் வரவில்லை என்றும் ஹிகாஷிதானி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மேல் சபை தேர்தலுக்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் பிரபலங்கள் வதந்திகள் வெளியிட்டும் ட்வீட் செய்தும் வந்தார். இந்த வழக்கில் போலீசார் அவரை ஏற்கனவே விசாரித்து இருந்தனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அவர் ஜப்பான் திரும்பவில்லை.












Click it and Unblock the Notifications